தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

இவ்விடம்

சல்மா
 இவ்விடம்
அதிகம் பரிச்சயமில்லையெனினும்
இங்கிருந்து கிளம்புவதென்பது
வீண் துக்கத்தினை உண்டாக்குகிறது

நீ என்னைத்
தீவினையின் எல்லையில் விட்டு
முன்னகர்ந்து செல்வதை அனுசரித்து
தடைசெய்ய மனமின்றி விலகிச் செல்கிறேன்

இடங்களும் மனிதர்களும் உருவாக்கும்
இந்த உறவும் பிரிவும்
படர்வதற்குள் கிளம்புகிறேன்
என் ஆதிகாலக் குகை வாழ்விற்கு

எல்லோருக்கும் போலவே
இங்கிருந்து எடுத்துச் செல்ல
ஞாபகங்கள் உண்டு
விட்டுச்செல்லத்தான் எதுவுமில்லை
விட்டுச் செல்கிறேன்
புறக்கணிப்பின் வெறுமையை
நிராகரிக்கும் வலிமை என்னிடம்
எப்போதுமிருந்ததில்லை
என்கிற சிறு குறிப்பை

தன் பிணத்தைத் தான் தொட்டுப் பார்க்கையில்…

ஈரோடு தமிழன்பன்
உச்சியில்
சமாதானக் கொடியை
உயர்த்தியாயிற்று

வரிவரியாய் ஒப்பந்தம் முகத்தில்
வரைந்தாயிற்று

சுவாசப் பையை
ஒப்படைத்துவிட்டு மூச்சு
வெளியேற
நாள் குறித்தாயிற்று.

மரணத்திடம்
சரணடையும் முன் ஒரு விருப்பம்
அவனுக்கு…

வளர்ச்சியை முன்னேற்றத்தை
வளைத்துப்போட்ட
அவனுக்குத்
தான்
விலக்கிவைத்த வாழ்க்கையிடம்
ஒரு தடவை
பேசிவிட்டு வரவேண்டும்…

உலராத
இரத்தத்துடன் கிடக்கும்
நேற்றுகளை
விலக்கிக்கொண்டே ஓடினான்

எனக்கும் பங்குண்டு

தாவேதா
பிறப்பும் இறப்பும் விதியின் விடை கேட்டு
எந்தை காலத்து விந்தை விளையாட்டு
இவன் பிறப்பும் இறப்பும் அவ்வரக்கர் கையில்
மனிதப் பிழையாய் நானோ இக்கரையில்

எட்டுத் திக்கும் உன் ஓலம் கேட்டேன்
என் செவிகளை மூடிக்கொண்டேன்
உன் குருதி தேங்கும் ஆழி கண்டே
என் விழிகளுக்கு விலங்கிட்டேன்

உரிமை என்றாய்; வாழ்வு என்றாய்;
என் உதடுகள் ஊமையாயின
செவியும் விழியும் உதடும் அடைத்தேன்
காந்திய தேசத்து காவலன் நான்

முறுக்கு மீசை பாரதியே
எங்கோர் தேசத்தில் அழுதவன் கண்டழுதாய்
கண்முன் ஆயிரம் கொலைகள்
கண்டும் காணாமல் கட்டையாய் நான்

வலியும் இரணமும் எமக்கே எமக்கா
பைந்தமிழ் பேசும் இனத்தின் உறவா
செம்மொழியாம் தமிழ் கண்ட வேந்தர்கள்
மொழியின் ஒலியோடு வலியும் கண்டனரோ

சேவும் லெனினும் உன்னோடிருக்க
அவர்தந்த தேசமோ உனையே எதிர்க்க
அன்பின் உருவாய் புத்தன் இருக்க
அவன் முன்னே மயானம் கண்டாய்

இன்று மனிதம் பேசும் மானுடம்
வசதியாய் உன்னை மட்டும் மறந்ததேன்
வெள்ளுடை தரித்த சொல்லுடை வேந்தர்கள்
தனக்கென பலனென உனை மறந்ததேன்

அங்கே உடைந்த கருப்பைகளும்
தழலில் கருகிய மொட்டுக்களும்
மிருகங்கள் குதறிய மனிதர்களும்
உதிரம் சிந்திய வீரர்களும்

விதியின் கணக்கில் பாவமென்றால்
அதில் பெரும்பங்கு எனக்குமுண்டு
பாவத்தின் சம்பளம் மரணமாம்
பாவம் மட்டுமே செய்த எனக்கு?

முள்வேலிக் கம்பிகள் மனித எல்லைகள்
எனில் அன்பும் அறமும் உறங்குவதெங்கே
கொடிது கொடிது மானிடப் பிறவி
அதிலும் கொடிதிந்த தமிழ்ப்பிறவி

எங்கு போனாய்?

உமா
திடீரென எங்கு போய் விட்டாய் நீ?
சுமூகமான தொடர்பில் தானே இருந்தோம் நீயும் ,நானும் ,

உன்னை காணும் போது மலர்ந்த உதடுகள்
இன்று உலர்ந்து போனது என்ன ?
வேலை செய்த அலுப்பும் ,
மனதில் ஏற்படும் சலிப்பும் ,
உன்னை கண்டவுடன் ,
காணாமல் போகும் தம்பி என்பேன் நான்!
காரணம்,
அலுப்பு தீர ஆறுதல் சொன்னாய்!
சலிப்பு தீர பிரார்த்தனை செய்தாய்!
இன்றோ ,
நீ பூஜித்த கோவில் சிலைகளும் ,
உன்னால் புகழ் பெற்ற ஓவியங்களும் ,
பேசி திரிந்த வகுப்பறையும் ,
நாம்நடந்து சென்ற பாதைகளும் ,
கையில் இருக்கும் அலைபேசியும் ,
உன் தலை கொட்டிய மோதிர விரலும் ,
கை நீட்டி உன்னை காற்றில் தேடுகிறது!
ஆன்மாவுக்கு மரணம் இல்லை
என்பது மனசுக்கு புரிகிறது
என்றாலும்
உன்னிடம் "ஏன்  இப்படி அவசர பட்ட என கேட்க தோணுது ! "

பிரிவு சம்மதமே

பிரபாகரன்
மிக எளிதாக
கூறினாய்...
பிரிந்துவிடுவோம் என்று...
பிரிவு சொல்
உன் வாயிலிருந்து வருமுன்
நினைத்துப்பார்த்துண்டா
உன்னை...!
எத்தனை இரவுகள்
எனக்காக அழுதாய்
விழியில் வழிந்த
கண்ணீரைத் துடைத்த
கைகளில் பார்
என் ரேகைகள் பதிந்திருக்கும்...!
என் வரவுக்காக
வழியில் காத்திருந்த
உன் விழிகளில் பார்
என் உருவம் புதைந்திருக்கும்...!
நள்ளிரவுத் தாண்டும்
நம் பேச்சு விடியலின் அறிகுறியாய்
சேவலின் கூவால் கேட்கும்
நம் வாழ்க்கை
உயர்வின் வழி ஆராய்ந்த
நம் பேச்சு
ஒரு முத்தத்துடன் முடித்து
உறங்கியிருப்போம்
நீ... நானாக
நான்...நீயாக
மறுபிறவியில் பிறக்க
இப்பிறவியில் செய்யும் புனிதமானது
நாம் காதலிப்பது என்றாயே
எப்படி
உன்னால் மிக எளிதாக
கூறிட முடிந்தது
பிரிந்துவிடுவோமென்று
பிரிவு
உனக்கு சந்தோசம் எனில்
பிரிவு
எனக்கும் சம்மதமே

இனியன செய்தல்

யுவபாரதி
 பசித்திருந்த
மரங்களின் வேர்க்காலில்
வார்க்கிறேன் நீரை....

புசித்த சில முள் மரங்கள்
கிழித்த காயம் வலித்தாலும்
வார்க்கிறேன் நீரை

ஓடி விளையாடு

கலைமகன் பைரூஸ்
ஓடிவிளையாடு நீ - ஓய்ந்திருக்காது விளையாடு
ஒருநாள் முடிந்திடும் மூச்சினை யெண்ணாது
துடிதுடிப்பாய் விளையாடு! துடிதுடிப்பாய் ஆடு!
தூங்கியபின் ஆட்டமில்லை – எண்ணாது ஆடு!

கனவுகள் நிஜமாகுமென நினைத் தாடுகிறாய்!
கண்டவரையெலாம் கரண்டையின்கீழ் எடுத்திட
ஊனமனங்கொண்டாடுகிறாய் - நீயாடு நீயாடு!
உலகமுந்தன் பாடைதூக்கிடும் நாளெண்ணாதாடு!

யானுயர்ந்தவ னெனநினைந்தே உதைக்கின்றாய்நீ
யாவுமறிந்தவன் நிலையெண்ணா துதைக்கின்றாய்!
வானும்வசமாகும் வின்மீனும் கீரிடம்தரிக்கு முனக்கு
வாழ்க்கை – பார் ஏதெனநீ யுணருங்காலே! உதைநீ!

சாதிகளி லுயர்ந்தவன் நீயென்று உதைக்கின்றாய்!
சாதியென்ன சாதி உந்தனுக்குள் எங்கேயோகம்?
நீதியை நிலத்தினி னழித்திட உதைக்கின்றாய்நீ
நிலையிலா வாழ்வின் முடிவேதென யறியாதுநீ!

ஒற்றைப் பந்தின் வாழ்வன்னது வாழ்க்கை – அது
ஓய்ந்திடும்வேகமறியாது உதைத்தாடுகிறாய்!
இற்றைப்பொழுதில் உந்தனாட்டம் கண்டுசிரித்திட
இருக்கின்ற சாரார் எண்ணி யாடுகிறாய் –நீயாடு!

இழுத்தடிப்பதில் தப்பேது உனைப்பந்தாடுவார்தனை!
இழுத்தடிப்பதில் தப்பேது உனையிகழ்வார்தனை!
வீழ்ந்துமடிந்தாலும் ஆகும் வீணரை வீழ்த்திடஆடின்
வம்புக்கும் வீம்புக்குமாடின் நீகண்டதெலாம் பூச்சியமே

ஆறு வரி கவிதை

ருசோ தெனிஸ்
இலக்கியம் பல படித்து
இரவு பல வழித்து
கவிதை பல படைக்கிறேன்...ஆனாலும்
தொலைபேசியில் நீ சொல்லும்
.ம்.. என்பதற்கு ஈடான
கவிதை என்னிடம் இல்லை.


இனிக்க இனிக்க உன்
நினைவுகளை குடித்துக் கொண்டே
இருப்பதால்...
சர்க்கரை வியாதி வந்துவிடுமோ
என்ற பயம் எனக்கு.


இரண்டு வரி கவிதை சொன்னால்
நான்கு முறை வெட்கப் படுகிறாய்
ஆக மொத்தம் எனக்கு
ஆறு வரி கவிதை.


பூக்களும் காயம் செய்யும்

வைரமுத்து
 
போடி போடி கல்நெஞ்சி!
மார்புக்கு ஆடை
மனசுக்கு பூட்டு

ஒரே பொழுதில்
இரண்டும் தரித்தவளே!

காதல் தானடி
என்மீதுனக்கு?

பிறகேன்
வல்லரசின்
ராணுவ ரகசியம்போல்
வெளியிட மறுத்தாய்?

தூக்குக்கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும்போது ஏன்
பிரியம் உரைத்தாய்?

நஞ்சு வைத்திருக்கும்
சாகாத நாகம்போல்
இத்தனை காதல் வைத்து
எப்படி உயிர் தரித்தாய்?

இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன்

இமைகளின் தாழ்வில் -
உடைகளின் தளர்வில் -

என்னோடு பேசமட்டும்
குயிலாகும் உன்குரலில் -

வாக்கியம் உட்காரும்
நீளத்தில் -
வார்த்தைகளுக்குள் விட்ட
இடைவெளியில் -

சிருங்காரம் சுட்ட
பெருமூச்சில்

வறண்ட உதட்டின்
வரிப்பள்ளங்களில் -

நானாய்த்தான் கண்டறிந்தேன்
காதல் மசக்கையில்
கசங்கும் உன் இதயத்தை.

சேமித்த கற்பு
சிந்தியா போயிருக்கும்?

நீயாக கேட்டிருந்தால்
நெஞ்சு மலர்ந்திருப்பேன்

உண்டென்றால்
உண்டென்பேன்
இல்லையென்றால்
இல்லையென்பேன்

இப்போதும் கூட
தேசத்துரோகமென்பதை
ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி

உள்ளாடும் காதலை
ஒளிக்கவே பார்க்கிறாய்

காதலில்
தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட
விரயமாதல் கூடாது

காலப் பெருங்கடலில்
நழுவி விழும் கணங்களை
மீண்டும் சேகரிக்க
ஒண்ணுமா உன்னால்

இந்தியப் பெண்ணே!
இதுவுன்
பலவீனமான பலமா?
பலமான பலவீனமா?

என்
வாத்தியக்கூடம்வரை
வந்தவளே

உன் விரல்கள்
என் வீணைதடவ வந்தனவா?

இல்லை
புல்லாங்குழல் துளைகளைப்
பொத்திப்போக வந்தனவா?

என் நந்தவனத்தைக்
கிழித்துக்கொண்டோடிச்
சட்டென்று வற்றிவிட்ட நதி நீ

உன் காதலறிந்த கணத்தில்
என் பூமி பூக்களால் குலுங்கியது

நீ வணங்கிப் பிரிந்தவேளை
என் இரவு நடுங்கியது

பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே
காதலையே அறிவித்தாய்

இருபதா? முப்பதா?
எத்தனை நிமிடம்?
என் மார்பு தோய்ந்து நீ
அழுததும் தொழுததும்

என் பாதியில்
நீ நிறையவும்
உன் பாதியில்
நான் நிறையவும்
வினாடித்துகள் ஒன்று
போதுமே சிநேகிதி

நேரம் தூரம் என்ற
தத்துவம் தகர்த்தோம்

நிமிஷத்தின் புட்டிகளில்
யுகங்களை அடைத்தோம்

ஆலிங்கனத்தில்
அசைவற்றோம்

உணர்ச்சி பழையது
உற்றது புதியது

இப்போது
குவிந்த உதடுகள்
குவிந்தபடி
முத்தமிட நீயில்லை

தழுவிய கைகள்
தழுவியபடி
சாய்ந்து கொள்ள நீயில்லை

என் மார்புக்கு வெளியே
ஆடும் என் இதயம்
என் பொத்தானில் சுற்றிய
உன் ஒற்றை முடியில்

உன் ஞாபக வெள்ளம்
தேங்கி நிற்குது
முட்டி அழுத்தி நீ
முகம்பதித்த பள்ளத்தில்

தோட்டத்துப் பூவிலெல்லாம்
நீ விட்டுப்போன வாசம்

புல்லோடு பனித்துளிகள்
நீவந்துபோன அடையாளமாய்க்
கொட்டிக் கிடக்கும்
கொலுசுமணிகள்

நம் கார்காலம்
தூறலோடு தொடங்கியது
வானவில்லோடு நின்றுவிட்டது

உன் வரவால்
என் உயிரில் கொஞ்சம்
செலவழிந்து விட்டது

இந்த உறவின் மிச்சம்
சொல்லக்கூடாத
சில நினைவுகளும்

சொல்லக்கூடிய
ஒரு கவிதையும்.
 

பணியிட மாற்றம்

பாண்டூ
நிலம் பார்த்து நின்ற
நாற்றங்கால்களுக்கு மாற்றாய்,
வானம் பார்த்து நிற்கும்
அடுக்கு மாடி குடியிருப்புகள்!

அணில்கள் ஓடிப்பிடித்தாடும்
மரங்களை மொட்டையாக்கி
வளர்ந்து நிற்கும்
மதில் சுவர் !

கிணற்றைச் சமாதியாக்கி
எழுந்து நிற்கும்
செயற்கை நீரூற்று !

வரப்புகளாய் வரிசைகட்டி
ஒதுங்கி நிற்கும்
செடி கொடிகள் !

தனது பாதை பழுதாகியதால்,
நுழைய முடியாமல் நிற்கும்
வருடாந்திரப் பருவக் காற்று !

புழுக்கையிடும் ஆடும்
சாணமிடும் மாடும்
மேய்ந்த இடத்தில்
ஓய்வாய் நிற்கும்
புகையைக் கக்கும் வாகனங்கள் !

தானியத்தைத் தேடிவந்து
ஏமாற்றத்துடன் நிற்கும்
பறவை இனங்கள் !

திருஷ்டி பொம்மையாய்
அலங்கரித்து நிற்கும்
சோளக்காட்டு பொம்மை !

விலை நிலமாகிப் போன
விளை நிலத்தை...
ஏக்கப் பார்வை பார்த்தபடி
செக்யூரிட்டியாய் நிற்கும்
முன்னால் விவசாயி