தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

ஒரு துளி விழுதே!

லதாமகன்
தெருவெங்கும் காலடித் தடங்கள்!
கதவை தட்டிவிட்டுப் போயிருக்கிறது!
மழை!
சொட்ட சொட்ட நனைந்திருக்கிறது!
காயப் போட்டிருந்த துணி!
நள்ளிரவில்!
விழித்திருக்கலாம் நான்!
ஓடுகள் கழுவும் மழையை!
ஒளிந்திருந்து பார்த்திருக்குமோ!
நிலா?!
குழந்தையை முத்தமிடும்!
தேவதை போல்!
சுவர்களில்!
முத்தமிட்டுப் போயிருக்கிறது மழை

தேடுவது

செண்பக ஜெகதீசன்
வாலிபம் என்பது !
வணங்காமுடி, !
அது !
வானைப் பார்க்கிறது.. !
வயோதிகம் !
வளைந்து மண்ணைப் பார்க்கிறது- !
தொலைத்துவிட்ட இளமையைத் !
தேடிப்பார்க்கிறதோ…!!

கனவும் நனவும்

செண்பக ஜெகதீசன்
வானம் பொத்துக்கிட்டு !
ஊத்துது.. !
வரப்பும் தண்ணியில !
மூழ்குது.. !
வயலும் குளமாத் !
தெரியுது.. !
தெருவுல தண்ணியும் !
ஓடுது.. !
தேரிக் காட்டிலும் !
தேங்குது- !
தெரிந்தது இப்படி !
கனவிலே, !
வறண்டு கிடக்குது !
வெளியிலே, !
வாங்க வேண்டும் !
தண்ணீரே…!!

இனிக்கும் நினைவுகள்

ஜே.ஜுனைட், இலங்கை
இனிப்பின் சுவை!
இதுதான்… சின்ன வயதில்…!
எங்கள் நினைவில்…!
சவர்க்கார முட்டையூதி!
சுவரில் வைத்து உடைத்தோம்…!
பட்டம் செய்து பறக்க விட்டோம் - அதில்!
நாமும் கற்பனையில் பறந்தோம்…!
நிலாச்சோறு சமைத்து வேடிக்கை பார்த்தோம்!
மழையில் நனைந்து ஓடிப்பிடித்தோம்!
வாழை நாரில் பூக்கள் தொடுத்து!
வீணை செய்து கீதம் இசைத்து!
கூட்டாய் விளையாடினோம்..!
முற்றத்து மணலில் வீடு கட்டி!
உள்ளே சென்றோம் உடைந்ததுவே!
வெள்ளத்தில் காகிதக் கப்பல் விட்டு!
நாமும் சென்றோம் கற்பனையிலே…!
என்ன சொல்ல, என்ன சொல்ல!
எல்லாம் இன்று ஞாபகமே!
இனிப்பின் சுவையும், இன்ப நினைவும்!
இதுதான் வேறு இல்லையே.!!
களிமண் உருட்டி!
சட்டி, பானை செய்தோம்!
வேப்ப மர நிழலிலே!
அடுப்பு மூட்டி விளையாடினோம்!
இன்னும் சொல்ல, இன்னும் சொல்ல!
நேரம் இங்கு போதவில்லை!
அன்று கொண்ட ஆனந்தமே!
உண்மை, உண்மை வேறு இல்லை

நன்றி கூறுவேன்

ஜே.ஜுனைட், இலங்கை
வித்தொன்றை சிதைத்துப் பார்த்தேன் !
எதுவும் இல்லாமல் போனது… !
இன்னொன்றை !
மண்ணுள் புதைத்துப் பார்த்தேன் !
மரமாக வந்து கதை பேசியது…!
இலைகளையும் பூக்களையும் !
உனக்குள் !
எப்படித்தான் சுமந்தாயோ என்றேன்.. !
மண்ணைப் போட்டு மூடினாலும் !
உன்னை !
மீறி வரும் சக்தி எங்கே என்றேன்…!
மறுபடியும் வித்தொன்றை !
சிதைத்தொருக்கால் பார்த்தேன்… !
மாய வரம் ஏதேனும் !
அங்குள்ளதுவா தேடினேன் -!
“வித்திலைகள்” மட்டும் தான் !
எனைப் பார்த்து முறைத்தன…., !
மற்றதெல்லாம் எனை விட்டு !
என் கண்ணை மறைத்தன… !
பூவின் நிறமேதும் அங்கு இல்லை.., !
கனியின் தீஞ்சுவையும் காணவில்லை…!!
விருட்சம் அதன் தலைவிதியை !
வித்தினுள்ளே தேடிப் பார்த்தேன் -!
ஒன்றும் புரியவில்லை…,!
ஒரு வித்தை நாட்டிப் பார்த்தேன் -!
கன்றாய் எழுந்தது !
மரமாய் விரிந்தது !
பூக்கள் சிரித்தன !
பூச்சிகள் வளைத்தன !
கனிகள் விளைந்தன.. !
என் கண்கள் வியந்தன..!
வித்திற்கு நன்றி சொல்ல !
தேடிப் பார்த்தேன் - !
காணவில்லை… !
விந்தை தான்..!, !
இறைவனுக்கே நன்றி சொல்வேன்

வார்த்தைக்குள் அகப்படவில்லை

ஜே.ஜுனைட், இலங்கை
பூக்களுக்குள் !
வாசம் எங்கே !
தேடினேன் - !
காம்பு மட்டுமே !
மீதமாகியது கைகளில்..!!
வெற்றிகளின் !
ஓரம் வரை சென்றேன், !
பெரும் கிண்ணக்குழிகளாய் !
நின்றன…!
மழை நாட்களில் !
“நீர் முத்துக்களை”ப் பிடித்தேன்..,!
வாழ்வின் நிலையாமை !
புகட்டின…!
சாலைகள் தோறும் !
கற்களைப் பார்த்தேன், !
மனித இதயங்களின் !
மறு வடிவம் யாம் என்றன..!
கண்ணாடி தேசத்திற்குள் !
நுழைந்தேன், !
என் நிழலைத் தவிர !
மற்றெல்லா நிழல்களும் !
ஒளிந்து கொண்டன…. !
உண்மை கொண்டு !
உலகைநோக்கினேன், !
பார்வைக்கு முன்னாலுள்ளதெல்லாம் !
பூஜ்ஜியமாகின..!
பார்வை தாண்டி !
நோக்கும் போது !
பௌதிகஅதீதம் காட்சிதந்தது.., !
வார்த்தைக்குள் அகப்படவில்லை !
அது..!!!

வாசிப்பு

கவிரோஜா
பார்வையால் என்னை தேர்ந்தெடுத்து..
விழிகளால் ரசித்து..
விரல்களால் என் பக்கங்கள் புரட்டி..
உன் மனதில் என்னை பதியவைப்பாய் என்று..
வரிசையாய் கால்கடுக்க காத்திருக்கிறேன்..உன் வாசிப்புக்காக..
இப்படிக்கு புத்தகம்.

அம்மா

மு.சோமிலன்
அன்னையவளுக்கு என் கிறுக்கலில் ஒன்று......

அன்பெனும் பிறப்பிற்கு
வற்றாத ஊற்றிவள் - பண்பில்
அகிலத்தையே வசீகரிக்கும் தேவதையிவள்

வர்ணிக்க முடியாப்பேரன்பு கொண்டு
காதலிப்பவள் - ஆனாலும்
வர்ணிக்க முயன்றே கணமும்
தோற்றுப்போகிறோம் - முடிவிலியால்

வரையறை அற்றது அவள் அன்பு
சிறு குறையற்றது அவள் காதல்
குறும்புகள் சண்டைகள் கோபங்கள்
அனைத்தையும் கட்டிப்போடுகிறது
அவளது ஒற்றை முத்தம்

சமயங்களில் எனை
குழந்தையாய் மாற்றுகின்றாள்
தருணங்களில் அவள்
குழந்தையாகவே மாறுகின்றாள்

வற்றாத ஊற்று அவள் கருணை
"அம்மா"
அவள் முடிவிலியாய்ப்பொழியும்
அன்பு மழை

காதலென்னும் உணர்வினிலே கலந்திட்ட போது!

சத்தி சக்திதாசன்
காதலென்னும் உணர்வினிலே!
கலந்திட்ட போது!
கட்டுண்ட நினைவுகள்!
சிக்குண்டு தவித்தன!
சிந்தனையின் துளிகளெல்லாம்!
தேனாகிச் சுவைத்தன!
பிரிந்து சென்ற பொழுதெல்லாம்!
வேம்பாகிக் கசந்தன!
நின்னோடு இணைந்து நின்ற!
நிமிடங்கள் துளிகளாக!
கண்ணே நீ மறைந்த கணங்கள்!
மணிகளாகிக் கனத்தன!
கண்களின் வழியூடு மெதுவாய்!
இதயத்தில் புகுந்தவள்!
உன்னெஞ்ச மெத்தையில்!
துயில்பவனென அறிந்ததும்!
விண்ணோடும் முகில்களில்!
தானோடி மகிழ்ந்தவன்!
காதலென்னும் உணர்வுகளின்!
நவரசத் தன்மைகள்!
காலமெல்லாம் ருசித்திட!
காணவேண்டும் உண்மைக்காதல்!
கரும்பாகிக் இனித்திடும்!
கனலாகித் தகித்திடும்!
பலபொழுது கசந்திடும்!
சிலநேரம் வியந்திடும்!
தனதென்றால் சிலிர்த்திடும்!
தனியாகச் சிரித்திடும்!
ஆமாம்!
காதலென்னும் உணர்வினில்!
கட்டுண்ட வேளையில்

தேயிலை!

மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
பார்க்கும் கண்கள் எதற்கும் என்றும் !
பசுமை வார்க்கும் தேயிலை !
பார்த்து பார்த்து வளர்ப்பவன் வாழ்வில் !
பசுமை வார்ப்ப தேயிலை !
ஈர்க்கும் அழகை வைத்தே இருக்கும் !
இயற்கை பூவனம் தேயிலை !
யார்க்கும் மனதில் உற்சா கத்தை !
யாசகம் போடும் தேயிலை !
அடிமை கால வாழ்விற் கன்று !
அடிக்கல் நாட்டிய தேயிலை !
மிடியைத் தீர்க்கும் வழியை காட்ட !
மறந்து போன தேயிலை. !
காடாய் இருந்த மலைகள் எங்கும் !
கால்கள் ஊன்றிய தேயிலை !
மாடாய் உழைத்து மாண்ட பரம்பரை !
மாற்றிட மறுத்த தேயிலை !
நாடாய் இருக்க காடுகள் எங்கும் !
நல்வழி அமைத்த தேயிலை !
வீடாய் லயங்கள் என்னும் குடிசை !
விதைத்து விட்டத் தேயிலை !
கடலது தாண்டி இலங்கை வந்தோர் !
கண்ணாய் வளர்த்த தேயிலை !
உடல்வளம் என்னும் உழைப்பத னாலே !
உயர்த்தி விட்ட தேயிலை !
கள்ளத் தோணி என்றே அழைக்க !
காரணம் ஆகியத் தேயிலை !
உள்ளம் இருக்கும் ஏழை வாழ்வை !
ஊமை ஆக்கியத் தேயிலை !
சொல்லச் சொல்லச் சோகம் தீரா !
சோதனைக் கொடுத்த தேயிலை !
செல்வர் வாழ எம்மவர் இன்னும் !
சிந்திடும் உதிரமே தேயிலை