தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

புதிய ஆண்டு

ஈஸ்வரி
இமை மூடாது
பார்த்திருந்தாலும்
இனி திரும்பாது
சிதறிய காலங்கள்!

இதழ் மூடாது
பேசினாலும்
இனி திரும்பாது
இழந்த வருடங்கள்!

இடை விடாது
சிந்தித்தாலும்
இனி வராது
சென்ற பருவங்கள்!

இழந்தவற்றை
மறந்திருப்போம்

இனி வரும் நாட்களை
வரவேற்போம்

காதல் என்றால் என்ன?

கல்முனையான்
 
காதல் என்றால் என்ன?
நேற்று என் மனது என்னிடம் கேட்ட கேள்வி இது.....

நான் சொன்ன பதில்

வெறுமையாய்க்கிடக்கும் இதய அறைகளில்
வாடகைக்காய் வந்திருக்கும் ஒரு குடும்பம்
மாதாந்த வாடகையாக ஓரத்தில் ஒரு சிணுங்கல்
அச்சிணுங்கலின் ஈரலிப்பில் உப்பிப்போன இதயம்.

சில வேளைகளில் சிறு சிறு சிராய்ப்புகள்
அச்சிராய்ப்பினுள் கொதிக்கின்ற எண்ணெய்க் குதமாய்
வெற்றுப் பையுடன் ஏங்கும்
ஏழைகளின் அங்கலாய்ப்பு.

காதலின் பின் உன் மூளைக்கும்
உன் வீட்டு  மூலைக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா
இரண்டிலுமே கவலைப் புழுதியால்
படிந்த ஒட்டடைகளின் சாம்ராஜ்யம்.

அடிக்கடி சிரித்துக்கொள்வாய்
நீ காலைக் கடன் முடிக்கும் வேளை கூட
ஏன் தெரியுமா
உன்னால் இயன்ற கடன் ஒன்றை கழித்ததற்காக.

சில வேளைகளில் நீயும் ஞானியாவாய்
உன் தலைக்குப்பின்னால் ஞான ஒளி தோன்றும்
அதை சில பேர் தப்பாக நினைத்து
உன்னிடம் தீட்சை பெற வருவர்

அவர்களுக்கு தெரியாது போலும்
அந்த ஒளியின் அடிப்படை மூலம் எதுவென்று
அது தெரிந்தால்
அவர்களும் ...
வேண்டாம் எதற்கு இந்த வம்பு

அன்பும் அரவணைப்பும்

திவ்யாநாராயணன்
உனக்கு பிடித்தவர்களின்
பிடித்தவற்றை
உனக்கு பிடித்ததாக
மாற்றிக் கொல்-வதைவிட
அவற்றை ரசிக்கத்
தெரிந்தவனாக இரு
உன் அன்பார்ந்தவர்களின்
துன்பத்திலும்
உன் அன்பும் அரவணைப்பும்
அவர்களுக்கு துணைபோகும்.
உன் உயிர் பிரிந்தாலும்

ஆனந்த அருவி

பாவண்ணன்
அடர்ந்த மனஇருட்டில்
அடுக்கடுக்கான மலையிடுக்கில்
எங்கோ அடைபட்டுக் கிடக்கிறது
ஆனந்த அருவியின் ஊற்று
பாயும் இடமெங்கும் குளுமை
பனிச்சாரல் ததும்பும் புகைமுட்டம்
தாவி இறங்கும் வழிநெடுகத்
தழுவிப் புரளும் குளிர்த்தென்றல்
பாறையோ மரமோ செடியோ
எதிர்ப்பட்டதை இழுத்தோடும்
ஊற்றுக் கண்ணில் துருவேற
ஊருராய் அலைகின்றேன்
சுமைகூடி வலிகூடி
இமைமுடாது திரிகின்றேன்
உச்சிமலை அருவியின்கீழே
உடல்நனைய மனம்நனைய
ஒற்றைக் கணப்பொழுதில்
துருவுதிர தடையுடைய
பொங்கி வழிகிறது ஆனந்த அருவி
தோள்தழுவி முகம்தழுவி
இரண்டு அருவிகளும் இணைந்து வழிகின்றன
இன்பச் சிலிர்ப்பை
எடுத்துரைக்க மொழியில்லை
ஆதிப் பாறையென
அங்கேயே நிற்கின்றேன்
அனைவரையும் தாண்டி
வழிந்தோடுகிறது அருவி- 

அடுப்பங்கரை

கீதா
சுள்ளி பொறுக்கி வெறகு வெட்டி
தென்ன மட்டய காயவச்சி
வெறக நல்லா பொளந்துவச்சி
அடுப்பில் நுழைச்சி பத்தவச்சி
எண்ணை ஊத்தி எரியவச்சி
மண் சட்டிய ஏத்தி வச்சி
ஊதி ஊதி இருமி இருமி
வறட்டி புகைய விரட்டி விரட்டி
கண்ணைக் கசக்கி வாயப்பொத்தி
அல்லும் பகலும் அனலில் வெந்து
அமுதமுதாய்ச் சமைச்சிடுவ..
ரே-ஷன் கடை வாசல் போயி
காலு வலிக்க கியூவில் நின்னு
மண்ணெண்ணை வாங்கி வந்து
பம்ப்பு ஸ்டவ்வில் ஊத்தி ஊத்தி
கையெல்லாம் வலிக்க வலிக்க
பிடியை இழுத்து அடித்து அடித்து
அடைப்பை எடுத்து பத்தவச்சி
இருப்புச் சட்டிய மேல வச்சி
அடுப்புச் சத்தம் காதை அடைக்க
அடுக்களையில் அருகில் இருந்து
ருசி ருசியா சமைச்சிடுவ…
கேஸ் ஸ்டவ்வு, மைக்ரோ வேவ்வு,
தணல் அடுப்பு தந்தூரி
மின்சாரம் இயக்கும் அடுப்பு
சூரியனே சமைக்கும் அடுப்பு
அடுக்கடுக்கா அடுப்புகளும்
அடுத்த கட்டம் போயிருச்சி
அழகழகா மாறிடுச்சி
சட்டி பானை கூட்டங்கூட
நான் ஸ்டிக்கா மாறிடிச்சி
எத்தனையோ தெரிஞ்சிரிந்தும்
உன் திறமைய புதைச்சிவச்சி
உன் மகிழ்வ மறைச்சிவச்சி
அடுக்களையில் சமைச்சி சமைச்சி
அதுக்குள்ளே புழங்கி புழுங்கி
உன் உலகே சுருங்கிருச்சி
உன் உசுருகூட கருத்துரிச்சி..

- கீதா (geeths.info)

துரோகப் பாம்பு

ஆண்டனி
ஆதாம் ஏவாளுக்கு
ஆப்பிள் கொடுத்து
ஆண்டவரிடமிருந்து பிரித்த
அந்தப் பாம்பு..!

சீசர் கொன்று ஆண்டனி கொன்று
கிளியோபாட்ரா மார்தவழ்ந்து
கிளியொத்த பேரழகி கொன்ற
அந்தப் பாம்பு..!

கர்ண்னைக் கொல்ல
காப்பியத்தில் கண்ணன் பிடித்த
அந்தப் பாம்பு..!

எட்டப்பனை வைத்து
கட்டபொம்மன் கதை முடிக்க
வெள்ளையர் பிடித்த
அந்தப் பாம்பு..!

அன்பை அழிக்கும்
நட்பை நசுக்கும்
அந்த நச்சுப் பாம்பு..!

அரசியெலாம் ஆழ்கடலில்
அதிகமாய் ஊரும்
ஆசை காட்டி அழிவு தரும்
அந்தப் பாம்பு..!

எவரும் எட்டிப் பார்க்கமுடியா
மனிதனின் மனமெனும்
அடர்ந்த பெருங்காட்டுக்குள்
ஏதோவொரு மரத்தின் நெடுங்கிளையில்
அழிவில்லாத ஆகாயமாயின்னும்
நெளிந்து கொண்டுதானிருக்கிறது
துரோகமெனும் பெயர் சுமக்கும்
அந்தப் பாம்பு...!
 

வீடு

கோகுல கண்ணன்
என் சரணாலயத்தில்
அவ்வப்போது பறவைகள்
குடிகொள்கின்றன

பறவைக்கூடுகளால்
ஆக்கப்பட்ட கூடென
எத்தனை பெருமையெனக்கு

அதிரும் வீடு
இடையற்ற படபட
சிறகடிப்பில்
மொழிமீறிய
தீராத உரையாடலில்

பறவைகளின் அன்பளிப்பென
சேமித்து வைக்கிறேன்
கழன்றுவிழும் சிறகுகளை

சிறகு முளைத்த நந்தவனமாய்
பூத்துக்குலுங்கும் வீடு
ஒரு நாள்
பூமியின் ஈர்ப்பை
இலகுவாய் உதறி
காற்றின் கரம்பற்றி
அந்தரவெளியில் தாவியேறும்

நான் காத்திருக்கிறேன்

பறவைகளின் முடிவற்ற கருணையில் உதிரும்
அந்த ஒற்றைச் சிறகுக்காக

மழையும் மலரும்

சீமான் கனி
அது காற்று மழை வாசம் பூசிக்கொண்டு
குறைந்த பச்ச குளிர் விற்ற காலம்.
காலையில் பறித்த மல்லிகை,
மாலை வரை மாறிவிடாமல் இருக்க பூக்காரி
அடிக்கடி அள்ளி தெளிக்கும் தண்ணீராய்
வெறும் சாரலை மட்டும்
சமைத்து கொண்டிருந்தது வானம்.

கல்லூரியில் கணித பாடம் கடினமோ என்னவோ
கல்லுரி வாசல் விட்டு வருகிறதொரு
வாடா  மல்லி வாடிய முகத்தோடு.

கவிதைக்காக காத்திருந்த காகிதம் போல் - உன்
வருகைக்காக காத்திருந்த வான் மகன்
வரி வரியாய்  எழுதுகிறான் மழை துளி மை கொண்டு
மங்கை இவள் முகம் கண்டு.
மழைத்துளிகள் உன்னை பங்கு போட்டு கொண்டன.
சில துளிகள் உன்னை தரிசித்த
தருனத்தொடு தரையில் விழுந்து
தற்கொலை செய்து  கொண்டன.

சில உன் சுவாசம் தீண்டி
சுகம் பெற்றன.

சில கார்குழல் கவ்வி
கடந்து போயின.

சில தாங்க அங்கமெல்லாம் தவழ்ந்து
சுடிதார் துணியில் இடம் பிடித்து இறந்து போயின.

உன் சுடிதார் வரைந்த மொட்டுக்கள் எல்லாம்
பொசுக்கென பூத்துவிட நீ மட்டு மார்பில் தவழ்ந்த
மயில் நிற துப்பட்டாவில் மறைந்து கொண்டாய்.

பூமியில் பூத்த பூவொன்று புத்திமாறி மொட்டாய்
முகம் மூடிய அதிசயம் அங்கு அரங்கேறியது.

வேகமாய் ஓடிவந்து பூமி பெண் விசாலமாய்
விரித்து பிடித்திருந்த ஒரு மர குடைக்குள்
மருகி குறுகி நின்று கொண்டாய்.

ஓடி ஒழிந்தது நிலவோ என்று வானில் மின்னல் வெட்டி
தொலைந்து போன நிலவை மின்னல் டார்ச் அடித்து
தேடி தேடி வானம்  கிழித்து  போனது மின்னல்.
மீண்டும் மலர்ந்தது உன் மலர் முகம்.

பனி நனைத்த ரோஜாவில்  பனியை மட்டும்
கடத்தி போகும் காற்றாய் ஒரு
கருப்பு நிற கைகுட்டையால் மழை துளிகளை
மறைத்துவிட்டாய்.

காதலை காட்டிகொடுக்கவே படைக்க பட்ட
தோழமை தொண்டர்களில் உன்
தோழியும் ஒருத்தி போல
உன்னை மட்டும் வாசித்துகொண்டிருந்த
என்னை படித்து உன் காதில் ஏதோ ஒப்பித்து
ஒழிந்து கொண்டால்.

காற்றில் ஆடிய நாணல் நிதானமாய்
நிலைகொள்வதுபோல் நீயும்  விழி  நிறுத்தி
மொழி மாற்றி ஒரு பார்வை பகிர்ந்தாய்.
ஒரு நீல மின்னல் நீண்டுவந்து இதயம் இடித்து போனது.

இதயத்தில் படபடத்த பட்டாம்பூச்சி
இப்போது இமைகளையும் பற்றி கொண்டது.

வழி குழிஎல்லாம் மழை துளி நிரப்ப மனமோ
உன் மனகுழி தேடி நிரம்பி வழிந்தது.

தொண்டர்களுக்கு நடுவே சில
குண்டர்களும் இருப்பார்கள் தானே - உன்
இன்னொரு தோழி ஒருத்தி குடையோடு வந்து
குடைக்குள் வரச்சொல்லி வாதாடினாள்.

நீ குதித்து ஓடி குடைக்குள் நுழைகையில்
குடைக்கம்பி ஒன்று உன்னை செல்லமாய்
குட்டி வைத்து வராதே என்றது.

நீ குடையை  கோபித்து கொண்டு முகம் சுழிக்கயில்
குழர்கற்று ஒன்று சுழன்று அடித்து  உன்
கார்குழல் இரண்டை கடன் வாங்கி போனது.

கொஞ்ச நேரத்தில் உன்னை குட்டிவிட்ட
குற்றத்திற்காய் எட்டு கண்களிலும்
சொட்டு சொட்டாய் ஈரம் வைத்து கொண்டது  குடை.

பணி முடிந்ததும் பத்திரமாய் கூடு சேரும்
குருவிபோல் குடைக்குள் கூடி குடி போனாய்.

கடத்த பட்டது என் இதயம்

அப்பா வைத்த வெடிகுண்டு

த‌மிழக முதலமை‌ச்ச‌ர் கலைஞர் கருணாநிதி
வெடிகுண்டு சம்பவத்தில் சிக்கி சிதறிய தீவிரவாதியின் குழந்தை பற்றி
தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் உருக்கமான கவிதை :
விண் முட்டும் மாளிகைகளை
வியந்து நோக்கியவாறு -
வீதியில் விளையாடிக் கொண்டிருந்த
குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு
நடக்கிறாள் அந்த நங்கை.

குழந்தை அவள் இடுப்பில் இருந்தவாறு
வீதியோரத்துக் கடைகளில் அழகுற அடுக்கப்பட்டுள்ள
விளையாட்டுப் பொம்மைகள் மீது விழியோட்டி -
விரலையும் நீட்டி -
"அதோ! அதோ! அதை வாங்கிக் கொடு!''
என்று பிடிவாதம் செய்கிறது.

"அப்பா நாளைக்கு வந்து விடுவார்,
வந்தவுடனே வாங்கித் தருவார்;
இப்போ வாயை மூடிக்கிட்டு இரு''
என்று அந்த இளந்தாய்
கண்டிப்பான குரலில் - கனிவும் கலந்து;
"கண்ணு இல்லே! இப்ப அடம் பிடிக்காம சும்மா இரு!''
குழந்தை சமாதானம் அடைவதற்குப் பதில்
கோபம் கொள்கிறது!

குழந்தையின் கோபம்
அழுகையில்தானே கொண்டு போய் விடும்!
அழுகிறது - அம்மா அரவணைப்பு பலிக்கவில்லை!
அதட்டலும் எடுபடவில்லை.
வீறிட்டு அலறுகிறது - அந்த
வீதியே அதிரும் அளவுக்கு அலறுகிறது.
அம்மாவுக்கு கோபம் தாங்கவில்லை.

குழந்தையை வீதியிலே இறக்கி விட்டு;
"இங்கேயே நின்னு அழு;
நாளைக்கு உங்க அப்பன் வரும் வரையில்
அழுதுகிட்டே இரு!
அவர் வந்து பொம்மை வாங்கிக் கொடுப்பார்''
ஆத்திரம் பொங்கிட அம்மா நடக்கத் தொடங்கினாள்!
"ஆபத்து! ஆபத்து!
அந்தப் பக்கம் போகாதீர்கள்! போகாதீர்கள்!
தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டு
அங்கேதான் இருக்கிறது!''
ஒலிபெருக்கியில் அந்த எச்சரிக்கை முழங்கிடவே;

அந்த இளந்தாய், ஒலி வந்த திசையில் திரும்பிப் பார்த்தாள்.
தீயை மிதித்தது போல் ஓர் அதிர்ச்சி; -
வெளியூருக்குப் போவதாக விடைபெற்றுச் சென்ற கணவன் ;
"திரும்பும் போது தீவிரவாதியாகத் திரும்புவேன்'' என்று
முரட்டுக் கர்ச்சனை செய்தது இப்போது அவள்
மூளையைக் கலக்கிற்று.

நினைவுத் தடத்திலிருந்து அவள் மாறுவதற்குள் -
பயங்கர சப்தம்!
இடி முழக்கம்!
மின்னல் போன்ற தாக்குதல்!
அந்த வீதியே மனித உடல்களால் -
அதுவும் சிதைந்த உடல்களால் நிரம்பியது -
வீதியோரத்துக் கடைகள் எரிந்து கொண்டிருந்தன -
இளந் தாய்
இறுதி மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.

விளையாடுவதற்கு பொம்மை கேட்டு அழுத குழந்தை
வெடித்துச் சிதறி;
அந்தத் தாயின் மீது
ரோஜா இதழ்களைப் போல
உதிர்ந்து கிடந்த காட்சியை;
அங்கு ஓடிவந்த ஒருவன் உற்றுப் பார்த்தான் -
"ஓ''வெனக் கதறினான் -
ஆம்; அவன்தான் வெளியூர் சென்றிருந்த அவள் கணவன்!
அந்தக் குழந்தையின் தந்தை -
தீவிரவாதிகளுடன் திட்டம் தீட்டி விட்டு; அந்தத்
திட்டத்தை இப்போது நிறைவேற்றி விட்டான் -
குழந்தையின் சிதறிய உடலும் -
அவன் மணந்த அந்தக் கோகிலத்தின் முகமும் -
"இப்போது திருப்தி தானே!''
என்று அவனைப் பார்த்துக் கேட்பது போல இருந்தது

சப்தமற்ற சில்லரைகள்

சு.மு.அகமது
 


கவிப்பொழுதி அந்திமக்காலம்...

 

ஒரு பறவையின் கடைசி சிறகு

இலை உதிர்த்த மரம்

சப்தமின்றி மறைந்து போன செப்புக்காசு

மணி அற்றுப்போன கால் கொலுசு

எதுவாகவும் இருக்கக்கூடும்

 

விடியல் என்பது

குஞ்சுப் பறவையின் பிசுபிசுத்த இறகாயும்

தளிர் இலை தாங்கிய புது மரமாயும்

படபடக்கும் புது பணத்தாளாயும்

சிணுங்கும் மணிகளோடு சிலிர்க்க வைக்கும் நாதமாயும்

பிரபஞ்சத்தையே ஆட்கொள்ள விழையும்

சப்தமற்ற சில்லரைகளாகவும் பரிணமிக்கலாம்

 

இருக்கைகள் காலியாவதில்லை

அவை மதிப்பு கூட்டுபவை

என்றும் கூடுபவை

வசீகரமும் வனப்புமாய் ஆகர்ச்சிப்பவை

 

அண்ணாந்து பார்க்கையில்

புள்ளியின் துளியாய் வியப்பாளிகள்

அந்திமத்தின் அருகாமையில்

தங்கள் இலைகளை உதிர்த்தபடி !
 
- சு.மு.அகமது