தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

வாழ்க்கை படிகள்

இதயவன்
மனிதன்...
பூமியில் பிறந்து,
தரையில் தவழ்ந்து,
வழியில் நடந்து,
உலகை அறிந்தபின்
முதல் படியை
ஏறுகிறான்.

மனிதன்...
சிலரை அறிந்து,
பலரை தெரிந்து,
வாழ்வை புரிந்து,
கொண்டபின்
இரண்டாம் படியை
ஏறுகிறான்.

மனிதன்...
வாழ்வில் புகுந்து,
துன்பத்தில் ஒடிந்து,
இன்பத்தில் விழிந்து,
இலையாய் நின்றபின்
மூன்றாம் படியை
ஏறுகிறான்.

மனிதன்...
பிறப்பை மறந்து,
இடத்தை கடந்து,
துடிப்பை இழந்து,
இறப்பை நினைத்தபின்
கடைசி படியை
ஏறுகிறான்

விதி

முத்து கருப்புசாமி
மழையின் மரணத்தை
சிறிதாவது நீடிக்க
ஒரு மரம் கூட
இல்லாப் பாலையில்
பெய்யும் மழையாய்...

ஒரு ஏழையின்
வயிற்றில் குடிபுகுந்த
புற்று நோய்
மருத்துவமனையை மட்டும்
வடிகட்டி
மரணத்திற்கு வழிகாட்டுகிறது

இரு பக்கங்கள்

கவிக்கோ அப்துல் ரகுமான்
காலையின் ஒளியில்
கண்கள் திறக்கும்
கமலங்கள் ஒரு பக்கம்
மாலையின் இருளில்
சேலையை அவிழ்க்கும்
குமுதங்கள் ஒரு பக்கம்

தண்ணீர் தேடித்
தவிக்கும் வேர்களின்
தாகங்கள் ஒரு பக்கம்
புண்ணீர் நாறும்
பூமியில் பெய்யும்
மேகங்கள் ஒரு பக்கம்

விழிகள் அணைந்தவர்
சமாதியில் எரியும்
விளக்குகள் ஒரு பக்கம்
வழியினில் இருளில்
ஒளியினுக் கேங்கும்
விழிகள் ஒரு பக்கம்

கரிந்த சிறகுடன்
சுடரில் துடிக்கும்
விட்டில்கள் ஒரு பக்கம்
விரிந்த சிறகுடன்
கூண்டில் துடிக்கும்
பறவைகள் ஒரு பக்கம்

புத்தனுக் காகப்
பொன்னிழல் விரிக்கும்
போதிகள் ஒரு பக்கம்
சித்தன் ஏசுவின்
செம்புனல் குடிக்கும்
சிலுவைகள் ஒரு பக்கம்

அவசரத்தின் விதி

நா.சார்லஸ்
தலைகவசத்தை விட பாதுகாப்பானது
பொறுமையும்   கவனமும்
அவசர உலகத்தின் அவசரத்தில்
அதை எடுக்காமல் போகிறவர்கள் போகிறார்கள்
108 அவசரசிகிச்சை ஆம்புலன்சில்
அவசர அவசரமாய்

தினந்தோறும் தீபாவளி

செல்லம் ரகு
வறுமை துயர் நீங்க வேண்டும்
வாசல்தோறும் வளங்கள்
வழிய வேண்டும் – என்ற
மீட்பின் குரலோடு
அரியணையில் அமர்ந்தோர்
வாக்குறுதிகள் காற்றில் கலக்காது
வாணவேடிக்கையாய் – பல
வண்ணங்களில் மின்ன வேண்டும்!

‘ஆட்டம் பாமாய்’ வெடித்து
நாள்தோறும் பயமுறுத்தும்
விலைவாசி ஏற்ற இறக்கங்கள்
வாழும் வேட்கையை-
தகர்க்காது காக்க வேண்டும்!

நிம்மதி – சரவெடியாய்
படபடத்துச் சரியாமல்
சிந்தை பூக்கும் ஆசைகள்
அணை தாண்டி மகிழ வேண்டும்!

மதுவில் மயங்கி – உழைத்தும்
வீடு சேரா ஊதியத்தால் – பசி
பட்டினிச் சாவெனும் அவலங்கள்
சங்குச்சக்கரமாய் – நித்தமும்
வாழ்வை சுற்றாத நிலை வேண்டும்!

சின்னச்சின்ன
ஆசைகளின் வண்ணக்
கனவுகளில் மத்தாப்பூ சிதறல்கள்
பூத்துச் சிரிக்க வேண்டும்!

பொய், புரட்டு, சூது, லஞ்சமென
புதுப்புது முகமூடிகளுடன்
திரை மறைவு பொம்மலாட்டங்கள்
எரி குச்சியாய் கரைய
புது உதயம், புது வாழ்வென
புத்துணர்ச்சி பொங்க வேண்டும்!

எண்ணங்கள் – மறந்து
ஆசைகள் – துறந்து
வாழும் வழிகள் – இழந்து
வாசல் விட்டு வீதியில் தவித்தலின்றி
கிழக்கு வெளுக்கும் நாௌல்லாம்
எம்மக்களுக்கு – தினந்தோறும்
தீபாவளியாக வேண்டும்!

- செல்லம் ரகு, திருப்பூர்

நம்பி(கை) பிடி தோழி

சீமான்கனி
கார்கால  சாட்சியாய் கருத்த வானம்;
கண்ணீர்விடும் மேகம்;
மண்ணோடு மன்றாடி ஓயாத
மழையில் உளறல்;
கடிவாளம் போடாமல்  
காற்றோடு போராடி
கைகொண்டு நிலைமுட்டும்
கதவுகள்;
படுக்கையில் கூட்டு புழுவாய் நீ...

மழை கம்பிகளை
மீட்டி உனக்கான
சோகப்பாடலை
சொல்லிதர நான் வரவில்லை.

கூனிப்போன உன் முதுகேறி கொசுக்கள்
குதிரைச்சவாரி செய்யலாம்!
ஷோசியலிசம் சொல்லவேண்டிய உன் நாக்கு
சோற்றுக்காய்  கூச்சலிடலாம்!
சோற்றுபருக்கையின்   கூர்மை உன்
தொண்டைக்குழியை கிழித்து
இரத்தம் குடிக்கலாம்! அதன்
இளஞ்சூட்டில் இதயம்  வெந்து
இறந்தும் போகலாம்!
ஜன்னல் கம்பியாய் தேய்ந்த தேகம்
மழைச்சாரல் பட்டு  முறிந்துபோகலாம்!
போதும்!

துவண்டு துவண்டு வண்டு தீண்டும்
செண்டாய் இருந்தது போதும்!
அச்சமில்லை பாடிய பாரதியின் வாக்கை
துச்சமாய் எண்ணி துவண்டு கிடைக்காமல்
துளிர்த்துவா.

சொல்லுக்கே சோணங்கி விட்டால்
சொர்க்கம்கூட சுகமாய் இராது
சுருக்கென எழுந்து வா.

அடகுவைத்த உன் சிந்தனையை மீட்டு
அரியணையில் ஏற்று.
கனவுகள் வெறும் கற்பனைகள் அல்ல
அள்ளிவீசிய உன் கனவுகளை கண்டெடு.

மங்கைஎன்பவள் மலர்தான்
மலர்களுக்கு மதம்பிடித்தால்
காற்று  கதறும் காலநிலை சிதறும்.

உன் பட்டுச் சிறகுகள் படர்.
சூரியனின் சுடர் முட்டு.
நரம்புகள் கொண்டு
இயங்கியது போதும் வா இனி
நம்பிக்கை கொண்டு இயங்கு

கொக்கிகள்

சுரேஷ்
விடுகதை ஒன்றைச் சொல்லிவிட்டு
விடைதரு முன்னே மாண்டுவிட்டாய்.
வீடுவாசல் துறந்து வீதி காடுகளில்
விடை தேடிப் பயணித்தேன்.

கானல் நீர் போல் தோன்றும் விடைகள்
நெருங்கிச் சென்றால் கரைந்து போகும்.
தேடுதல் என்னவோ விடைகளுக்காகத் தான்
கிடைத்ததோ மேலும் சில நூறு வினாக்கள்!

கேள்விக் கணைகள் கொக்கிகளாய் உடம்பைத் துளைக்க
சுமைதாங்கிக் கல்லில் என் பாரம் இறக்கினேன் ஓய்வுக்காக.
இதுவரை வந்தவர் யாவரும் கேள்விக் கொக்கிகளின்
இரணத்தால் இதோடு திரும்பியிருந்தனர்.

விடை தேடும் வேலையை மூட்டை கட்டலாமென்று
வந்த பாதை பார்த்தேன், ஆயிரம் காலடித்தடங்கள்.
எதிர்த்திசை நோக்கினேன், சுவடுகளில்லாமல் நீண்டிருந்தன.

விடுகதையின் விடை எங்கிருந்தோ எனை அழைக்க
பயணித்தேன் என் சுவடுகள் பதித்து.
கொக்கிகள் இப்பொழுது சுகமாய் இருந்தன

முட்செடிப் பூக்கள்

கீதா மதிவாணன்
பச்சை வானில்
மஞ்சள் நட்சத்திரங்களாய்
மலர்ந்து சிரிக்கின்றன,
எனக்குப் பிடிக்குமென்று
தோட்டத்து மூலையில்
அம்மா வளர்த்துவரும்
டிசம்பர் பூக்கள்!

முட்செடியொன்று
புதராய் மண்டிவிட்டதென்று
அரிவாளெடுக்கும் ஒவ்வொரு முறையும்
அப்பாவிடம் போராடி
வெற்றி பெறுகிறாள் அம்மா!

என் கூந்தலில் குடியேறிய
குண்டு மலர்ச்சரம் கண்டு
தோழியர் சிலாகிக்க,
தினம் தினம் முள் தைத்து
ரணமான அம்மாவின் கரங்கள்
நினைவுக்கு வர,
சூடிய மலரின்
கனம் தாளாததுபோல்
தலை கவிழ்கிறேன் நான்,
குற்றவுணர்வை என்னுள் மறைத்தபடி

முகம் காணும் முயற்சி

பாவண்ணன்
 புத்தம் புதுசாக
புலன்சிலிர்த்துப் பூரிக்க
ஆசைமனம் முழுக்க
ஆனந்தம் தளும்ப
நேற்றைய கனவில் காட்சியாய் விரிந்தது
பத்துப் பதினைந்து ஆண்டுகள் முன்னால்
அருவிக்கரையில் நீ கொடுத்த முத்தம்

என்னை உறங்க வைத்த
அந்த நாள் கனவு அது

உதடு குவித்து நெருங்கிவந்த
உன்கண் பார்வையில்
குருதிக் கடல்பொங்கி
உடலின் கரைமோத
கிசுகிசுப்பே மொழியாக
கிறுகிறுத்து நிலைகுலைய
காற்றில் படபடக்கும்
கொடித்துணியாய் நடுங்கும்
உன்நாவின் நுனி தீண்டி
ஈரம் படிந்த என் உதடு

என்கனவில் இருந்த நீ
என்னிடமிருந்து மெல்ல நழுவி
உன்கனவில் திளைப்பதற்கு
உனக்கான வெளியை
உருவாக்கிக் கொண்டாய்

வட்டநிலா வெளிச்சத்தில்
வான்நோக்கி மல்லாந்து
கனவில் திளைத்திருக்கும் உன்னை
கண்டிருக்கிறேன் பலமுறைகள்

உன் கனவில் ஒரு கனவு
அக்கனவில் மறுகனவு
காலம் நெடுக நீள்கிறது
கனவுச் சங்கிலிக் கண்ணிகள்

உலகம் முழுதும் கனவுகள் விரிய
கனவுகளின் வெளியில்
கரைந்துள்ளன பல சித்தரிங்கள்

ஓயாத சித்திரங்களின் அசைவில்
உற்சாகம் பொங்க
சோதிடக் கிளிபோலத்
தொட்டுத் தள்ளுகிறது
ஆதிக்கனவில் விரிந்த
ஆதிமுகம் காணும் ஆவல்

கலைந்த காலத்தின் தடத்தில்
முடிவற்றுச் சரிந்து பொருகும் முகங்கள்
வெல்லும் எனது கிளர்ச்சியில்
நாளும் தொடரும் என்முயற்சி

பாயு மொளி நீ யெனக்கு

சி.சுப்ரமணிய பாரதியார்
 
பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு; தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு; வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்; தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!  வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு; பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு; காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி! மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! வான மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு; பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு; ஞான வொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்; ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே கண்ணம்மா! வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு; பண்ணுசுதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு; எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே; கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு; பேசுபொருள் நீ யெனக்குப் பேணு மொழி நானுனக்கு; நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்? ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! காதலடி நீ யெனக்குக் காந்தமடி நானுனக்கு; வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு; போதமுற்ற போதியிலே பொங்கிவருந் தீஞ்சுவையே! நாதவடி வானவளே! நல்ல உயிரே கண்ணம்மா! நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு; செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு; எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே! முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா! தரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு; வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு; தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம் ஓருருவமாய்ச் சமைத்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா!