முகம் காணும் முயற்சி - பாவண்ணன்

Photo by Jr Korpa on Unsplash

 புத்தம் புதுசாக
புலன்சிலிர்த்துப் பூரிக்க
ஆசைமனம் முழுக்க
ஆனந்தம் தளும்ப
நேற்றைய கனவில் காட்சியாய் விரிந்தது
பத்துப் பதினைந்து ஆண்டுகள் முன்னால்
அருவிக்கரையில் நீ கொடுத்த முத்தம்

என்னை உறங்க வைத்த
அந்த நாள் கனவு அது

உதடு குவித்து நெருங்கிவந்த
உன்கண் பார்வையில்
குருதிக் கடல்பொங்கி
உடலின் கரைமோத
கிசுகிசுப்பே மொழியாக
கிறுகிறுத்து நிலைகுலைய
காற்றில் படபடக்கும்
கொடித்துணியாய் நடுங்கும்
உன்நாவின் நுனி தீண்டி
ஈரம் படிந்த என் உதடு

என்கனவில் இருந்த நீ
என்னிடமிருந்து மெல்ல நழுவி
உன்கனவில் திளைப்பதற்கு
உனக்கான வெளியை
உருவாக்கிக் கொண்டாய்

வட்டநிலா வெளிச்சத்தில்
வான்நோக்கி மல்லாந்து
கனவில் திளைத்திருக்கும் உன்னை
கண்டிருக்கிறேன் பலமுறைகள்

உன் கனவில் ஒரு கனவு
அக்கனவில் மறுகனவு
காலம் நெடுக நீள்கிறது
கனவுச் சங்கிலிக் கண்ணிகள்

உலகம் முழுதும் கனவுகள் விரிய
கனவுகளின் வெளியில்
கரைந்துள்ளன பல சித்தரிங்கள்

ஓயாத சித்திரங்களின் அசைவில்
உற்சாகம் பொங்க
சோதிடக் கிளிபோலத்
தொட்டுத் தள்ளுகிறது
ஆதிக்கனவில் விரிந்த
ஆதிமுகம் காணும் ஆவல்

கலைந்த காலத்தின் தடத்தில்
முடிவற்றுச் சரிந்து பொருகும் முகங்கள்
வெல்லும் எனது கிளர்ச்சியில்
நாளும் தொடரும் என்முயற்சி
பாவண்ணன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.