இடமும் இருப்பும் - மனுஷ்ய புத்திரன்

Photo by Pawel Czerwinski on Unsplash

 வளைக்க முடியாத
உலோக விதிகளால் ஆனவை
இடங்களின் ஒழுங்கமைவுகள்

தெருவில்
எங்கோ நடந்து போகிறவர்கள் மீது
விரோதம் கொண்டிருக்கின்றன
கேட்டிற்குப் பின்னே
மினுங்கும் கண்கள்

மேலும் வேகமாக நடக்கிறோம்

தயங்கித்தயங்கி
ஒரு சதுரத்தில் பிரவேசிக்கிறீர்கள்

அச்சதுரத்தின்
புலனாகாத உட்சதுரங்கள்
உட்சதுரங்களின் உள்ளறைகள்
உள்ளறைகளின்
திறக்கக் கூடாதெனச்
சாபமிடப்பட்ட மர்ம அறைகள்
துரதிர்ஷ்டசாலிகள்
திரும்பவியலாத
சூட்சும வழிகள்

காற்றில் மிதக்கும்
நாற்காலிகளில் அமர்ந்திருக்கிறோம்

ஒரு தேனீரை அருந்தும்விதம்
ஒரு சிரிப்பின் அளவீட்டு விதிகள் மற்றும்
திடீரென உருவப்பட இருக்கும்
நம் நிர்வாணம் பற்றி
பெரும் அச்சங்கள் சூழ்ந்திருக்கின்றன

நுழைய வேண்டிய நேரத்திற்கும்
வெளியேற வேண்டிய நேரத்திற்குமான
தகர்க்க முடியாத அரண்களுக்குள்
மீண்டும்மீண்டும் நிகழ்வதாகிறது
காட்டுமிராண்டி நிலைக்கும்
நாகரிக நிலைக்குமான
பெரு வரலாறு

இடங்களின் ஒழுங்கமைவுகளை
நாம் கட்டுவதில்லை
அவை இடங்களாக இருப்பதாலேயே
ஒழுங்கமைவுகளாகவும் இருக்கின்றன

ஒழுங்கமைவுகளைத் தீவிரமாகப்
பின்பற்றுதலின் அவசியம்
முற்றிலும் அழிந்துபோகாமல்
தாக்கிக் கொள்ளவும்
அன்பு செய்யவும்
ஓர் உடன்படிக்கை
அல்லது சதிச்செயல்

இடங்களின்
வரைபடக் கோடுகள் மீதே
தெளிவாக அறியும்படி இருக்கின்றன
அவற்றின் மனநோய்க்கூறுகள்

சாய அனுமதிக்காத
சுவர்களின் முன்
தடைசெய்யப்பட்ட
கண்காணிக்கப்படும் உடல்கள்
இறுகிஇறுகி
இறுதியில் அவையும் இடங்களாகின்றன

நான் வெறொரு இடத்தின்
ஒழுங்கமைவாக
இவ்விடம் வராதிருந்தால்
இவ்விடத்தின் ஒழுங்கமைவு
இந்த அளவு
கழுத்தை நெரிக்காதிருந்திக்கலாம்

தப்பிச் செல்வதாக
ஒருவர் கூறும்போது
அது முற்றிலுமாக
இடங்களற்ற இடங்களுக்குத்
தப்பிச் செல்வதையே
குறிக்க வேண்டும்

நாம் தப்பமுடியாதவர்கள் என்பதாலும்
நம்முடைய ஒழுங்கமைவுகளில்
பிறருடைய இடங்களை அனுமதிக்க
இயலாதவர்கள் என்பதாலும்
மீறல்களின் அதிர்ச்சிகளுக்கேனும்
இரத்த ஓட்டத்தைப் பழக்கலாம்
மனுஷ்ய புத்திரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.