பூஜைக்கு வந்த மலர் - சிவகாசி திலகபாமா

Photo by Jr Korpa on Unsplash

வயதுக்கு
வந்தபோது
வாராத ஆசையுன்
வட்டமிடும் கண்பார்த்து
வந்து விட்டதே

வெள்ளித்திரையில்விரியும்
விளங்காத காட்சிகள்உன்
கண் பார்த்து
மண்பார்த்தபோது
புரிந்து போனதே

மீசை பற்றிகேட்டாள்தோழி
ஆசைகொண்ட நேரத்தில்
பசை போட்டு ஒட்டவில்லை

உன்முகமென்றால்
வசைபாடுவாளே

கடவுள் கூட
பிடித்துபோனது
உன்பெயரை அவருக்கு
வைத்திருப்பதால்

கனவு தந்து
கவிதை தந்து
காதல் தந்தது
உறவு தந்து
உயிரும் தந்து
உடலில் கலந்தது

இரவு கொன்று
இனிமை தின்று
இதயம் தீர்ந்தது
கண்மை கலைத்து
பெண்மை எழுந்து
மென்மையானது

தன்மை மறந்து
தவிக்கும் நெஞ்சம்
தனலாய் ஆனது

மலர்ந்த மலரிது
மடியும் முன்னே
மழையாய் வந்திடு

கலந்த இதயம்
கலங்கு முன்னே
கண்ணே வந்திடு

எனக்குள் இருந்து
எழும்பும் எழுத்திற்கும்
ஏக்கம் இருந்திடும்

தாக்கம் கண்டு
காக்க நீயுமெனை
நோக்கி வந்திடு

நேரம் கடந்தென்
நிலையை மறந்துன்
நினைவால் ஏங்குகின்றேன்

காலம் கடந்து
கனவில் நடந்தோர்
கனவைத் தேடுகின்றேன்

உலகம் மறந்து
உள்ளம் கலந்த
உள்ளத்தைத் தேடுகின்றேன்

விழிக்குள்ளே
விழித்திருக்கும் என்
உயிரைத் தேடுகின்றேன்

ஓர் இதயத்துள்ளே
ஒளிந்து கொண்டஎன்
இதயத்தைத் தேடுகின்றேன்

காயும் நிலவென
பாயும் ஒளியென
தாயென வருவாயே

உலகம் மறந்து
உலவும் உடலை
உனக்கா தருவது

அக்னியின் முன்னே
அழிக்கப்பட்ட என் ஆசையை
அழித்தா விடுவது

பிற மஞ்சம் ஏறினாலும்
நெஞ்சம் மாறாததை
வஞ்சம் என்பாயா

அர்ச்சிக்கப்பட்ட
மலரென்றாலும்
அட்சதையாய் விழுவதை

அள்ளிக் கொள்வாயா
எச்சில் பட்டாலும்
ஏற்றுக் கொள்வாயா

அணில் கடித்ததென
பூஜிக்கப்பட்ட
மலரென்றாலும்
பிரசாதமென ஏற்றுக் கொள்வாயா?
சிவகாசி திலகபாமா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.