எனதென்று இல்லாத பொழுதுகளில்
நீ உதிக்கிறாய்
கருகி உதிரும் மாம்பூக்களின்
அழுகல் நெடியோடு
எனக்கான எல்லாமும் ஓர்
ஒற்றை சருகென அலைபாய்கையில்
குலை தாங்கிய ஈச்ச மரமாய்
கூர்முனை ஓலை ஒற்றுகிறாய்
அதில்
வடியும் நிறம் பூசி
வாகாய் வந்தமர்கிறது உன் முகத்தில்
வலியும் வலி படர்ந்த நினைவுகளும்
தனிக் குயிலின் விடியலோசையாய்
தத்தளிக்கும் மூழ்குதலில்
எண்ணெயின் திரிவிளக்காய்
சுடர் படர்த்தி நிஜமடைகிறாய்
நெஞ்சார்ந்த தோழமைக்காய்
புள்ளியில் மையங்கொண்டு சுழற்றி அடிக்கிறாய்
எங்கோ மறைந்து போகிறது
மினுக்கட்டான் பூச்சியின் பகற்கனவும்
வானத்து விண்மீனின் பகலும்
எனது அபிலாஷைகள் போல்

சு.மு.அகமது