தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பக்கத்து வீடு

ஸ்ரீமதி
தனியே ஆடும் ஒற்றை ஊஞ்சல்,
பூத்து, வாடி, உதிரும் மஞ்சள் ரோஜா,
நீளமான தாழ்வாரத்தின்
ஆள் வாசனையற்ற தூண்கள்,
மகிழ்ச்சிக்கென விலைக்கொடுத்து
தனிமையே கொண்டு சேர்க்கும்
தகவல் தொழில்நுட்பங்கள்,
விடிந்துவிட்ட எதோவொரு காலையின்
அவசர அயல்நாட்டு அழைப்புகள்,
சிரித்தாலும் சர்க்கரைக் கேட்பார்களோ
என பழக மறுத்த
பக்கத்து வீடுகள்... - 

குருவிக் கூடு

தேவதேவன்
நிலத்தை ஆக்கிரமித்த தன் செயலுக்கு ஈடாக
மொட்டை மாடியைத் தந்தது வீடு
இரண்டடி இடத்தையே எடுத்துக் கொண்டு
உயர்ந்து தன் அன்பை விரித்திருந்தது மரம்
அந்த மரக்கிளையோடு அசையும்
ஒரு குருவிக் கூடாய் அசைந்தது
நான் அமர்ந்திருந்த அந்த மொட்டைமாடி

வேதனை

கல்முனையான்
மனிதனின் சோதனையின் உச்சக்கட்டம்
அவனுள் தோன்றும் வேதனை.
அவனையறியாமலே அவனுள்ளே
ஆட்கொள்ளப்படும் வெகுளித்தனம்

சற்று நிமிர்ந்தாலும் தலை வலி
காரணம் ஏதொ ஒரு வேதனை.. மனதளவில்
என் இரு கண்களும் ஏதோ இழந்த ஏக்கம்
இல்லை.. அது வேதனையின் தேக்கம்

என் காதுகள் கூட சரியாக கேட்பதில்லை
அவற்றின் திசுக்களில் கூட வேதனை போலும்
ஆமாம்,நேற்று என் காதில் எறும்பு ஒன்று
ஏதொ கூறியது மறந்துவிட்டது...

சற்று அண்ணார்ந்து பார்த்தேன்
வானத்தை அதிலும் ஒரு வேதனை
புரிந்தது எனக்கு தெளிவாக
வானில் இன்று நிலவு இல்லை அமாவாசையாம்

பூப்பூக்கும் காதல்

மன்னார் அமுதன்
நினைவுகளைத்
துரத்திச் செல்லும் இரவுகள்
இலக்கின்றிப் பயணிக்கும்

உன்
பிஞ்சு மனதிலே
தஞ்சம் கேட்டு
நித்தம் சண்டை பிடிக்கும்

பசியில்லாப் பகல்களும்
பட்டிணி இரவுகளும்
பழகிப் போகும்

பல்லியிடம் வீசியெறிந்த
உன் முதல் பல்
என் காதல் கருவூலத்தை
அலங்கரிக்கும்

உனக்குள் கட்டமைத்த
வாழ்க்கைச் சுனையில்
என் வேர்கள் நீர்தேடும்

இருந்தும்..
தவறுகளின் பட்டியலால்
மலடான நம் காதல்

உன்னொரு
புன்னகையால் மட்டுமே
மீண்டும் பூப்பூக்கும்

ஆற்றில் ஒரு நேர்கோடு

பிரபு
இருபுறமும் நீளும் ஆற்றில்
தொலைதலுக்கு அஞ்சி
குறுக்கே கடந்து
அக்கரை அடைவேன்.

கால்தடங்கள் மட்டுமே
வழிந்தோடும் ஆற்றின்
தூரவெளியில்
எனக்கிணையாய் நகரும் புள்ளிகள்.
ஆற்றின் பரப்பு மிகப்பெரியது!

இரவில்
ஆணி அறைந்ததுபோல்
தூரவெளி நிலைத்துள்ளது.
ஆற்றின் பரப்பு
வெளிச்சம் அளவே.

ஆறு என்பது
மணலூறும் இடமாகவே
என் கற்பிதம்.
ஆற்றின் பயணம்
வலமிருந்து இடமா?
இடமிருந்து வலமா?
பார்த்ததில்லை.

எல்லையற்றுத் தெரியும் ஆற்றில்
எனக்குக் கிடைத்ததென்னவோ
ஒரு நேர்கோடுதான்.
'அக்கரைக்குச் செல்
அலுவல் புரி
திரும்பி வா'

ஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சமாய்

சு.மு.அகமது
வழிப்போக்கன் விட்டுச் சென்ற மூட்டையில்
கந்தலாய் அவனது வழித்தடங்கள்
ஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சமாய்
பாவக்கனியின் அழுகல் பிசிறுகள்
தொற்றாய் கிருமிகளென

வார்தெடுத்த சர்பமொன்று
சாத்தானின் நிழலென ஊடுருவி
மாயமான மானை விழுங்கி ஏப்பமிடும்
எரிமலையின் பொருமலாய்

அந்தி சாய்கிற நேரத்தில்
எரியும் சிவந்த தழலோடு
வாய் பிளந்து அபகரிக்கும்
பொசுங்கும் நினைவு -சாம்பலை

பொழுது புலராத முன்பனிக்காலத்து
மழுங்கின படலங்களினூடே
பாய்ந்து பாயும் விண்மினிச்சிதறல்கள்
விழியற்றோனின் உதவிக்கம்பாய்
நீண்டும் மடங்கியும்


விட்டுச் சென்றவன் திரும்புகையில்
எடுத்துச் செல்வான் கந்தலையும்
நான் சேர்த்த அழுகல் பிசிறுகளையும்
கிருமிகளை மட்டும் சுதந்திரமாய் விட்டுவிட்டு

புதுப் பிறப்பெடுப்போம் புத்தாண்டில்

மா. கலை அரசன்
அஞ்சதியாய் வந்தயுனை முழுதாய் உணர்வதற்குள்
ஆடிக்கழித்தேன் யானென்று புயலாய் செல்கின்றாய்
இன்புற்றிருந்து உன் தினங்கள் சுவைப்பதற்குள்
ஈசுரலீலை நடத்தி நடவாதுபோல் நகர்கின்றாய்
உழன்று சுழன்று உய்வது துணிந்தோம்
ஊசலாடல் வாழ்விலும் மனதிலும் மாறக்காணோம்
எதிரும் புதிருமான கால ஓட்டத்தில்
ஏகத்துக்கும் கனவுகளை வளர்த்தோம் – என்னே,
ஐதென ஐதுபடல் மனதினின்று துறந்தோம்
ஒரித்தல் செய்து இன்புற்று வாழ்வதென்பது
ஓர்குலத்துள்ளும் மறந்தோம் – வாதோழா
ஔவித்தலொழித்து புதுப்பிறப் பெடுப்போம் புத்தாண்டில்

நம்பிக்கை

இலெ.அ. விஜயபாரதி
 

பெரும்பாறையை
யானையாய் ஆக்கியவனுக்கு
எவ்வளவு நம்பிக்கையிருந்தால்
கால்களில் பிணைத்திருப்பான்
சங்கிலியை?

பிரிவு

ஈஸ்வரி
பிறர் கொடுக்கும் எதையும்
பிரியத்தோடு ஏற்பவளுக்கு
இன்று மட்டும் ஏனோ முடியவில்லை
பிரிவென்ற ஒன்றை ஏற்பதற்கு

உயிர் கொடுத்தது அன்னை தான்
ஆனால் அந்த உயிருக்கு உணர்வை தந்தது
என்னுயிர் தோழி நீயல்லவா!

எப்படி ஏற்பேன் உன் பிரிவை
எப்படி மறப்பேன் உன் நினைவை!

என்னுடைய சோகங்களும்
உன்னுடைய புன்னகையால்
புறக்கணிக்கப்பட்டது புதுமைதான்

எப்போதும் உன் முகம்
பார்த்து சிரித்தவளை
இன்று மண் பார்த்து
அழ வைக்க எப்படி
மனம் வந்தது!

இனி யாரிடம் காண்பேன்
என்னை பெற்ற அன்னையை,
எனக்கு கிடைக்காத மூத்த சகோதரியை,

கண்களுக்கு சமாதானம் சொல்லி விட்டேன்
மனம் மட்டும் ஏனோ என்னிடம் மன்றாடுகிறது!

ஆண்டுகள் கடந்தும் தெரியவில்லை
ஆனால் இன்று நொடி நேரம் கூட
யுகமாக கழிகிறது!

என்றாவது ஒரு நாள்
இப்புவியின் எதோ ஓர்
மூலையில் என் முகம்
பார்க்கும் போது
அவள் தானே இது என நீ
ஐயப்படும் போது என்
அழுகை அன்று என்னை
அடையாளம் காண்பிக்கும்

மீண்டும் வருகிறது வெள்ளாமை திருவிழா

ராமு குமாரசாமி
ஐந்தாண்டுக்கு ஒருமுறை
முறை வைத்து நீர்பாச்சும்
வெள்ளாமைத்திருவிழா,
எங்கள்  வீட்டுக்கே வந்து
சேரும் இம்முறை.

சென்றமுறை வெள்ளாமை
அந்த ஊர் மக்களுக்கு
இம்முறை நமக்கு. சென்ற முறை
அவர்கள் நிறையவே,சாப்பிட்டார்கள்
பேராசைக்காரர்கள் .

நிறையவே சாப்பிட்டதால்
நிறையவே அஜீரணம்,அல்சர்

மருத்துவரிடம் வரிசைக்கட்டி
நிற்கிறார்கள்.
அவர்களில் சிலருக்கு
ஒரு ஆண்டு முழுவதும்
சிகிச்சை பெறவேண்டுமாம்

இன்னும் சிலபேருக்கு
அறுவை சிகிச்சையும்
தேவைப்படுமாம்

இது தவிர,இரண்டு மூன்று பேர்
டெல்லி மருத்துவ மனையிலும்
அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்

இந்ததடவை  எல்லாம் நமக்குத்தான்
வாரும், சேர்ந்து வாருவோம்
வெள்ளாமையை .

என்னது ? உங்களுக்கும  பங்கு
கேட்கிறீர்களா?
கவலைப்படாதீர்கள்  உங்களுக்கும்
இருக்கு  இலவசங்கள்.


விரைந்து வாருங்கள், இந்த முறை
எல்லா கிராமத்துக்கும்  எல்லா
நகரத்துக்கும்  வெள்ளாமையில்
பங்கு உண்டு.

ஆனால் தலைமை
விவசாயிக்கு  உங்களிடமிருந்து
ஆளுக்கு ஒரு மூட்டை வந்தாக
வேண்டுமிது கட்டாயம்.
வாழ்க ஜனநாயகம்