தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

அறிவியலும் முன்னேற்றமும்

தமிழ்நம்பி

ஒளிவிளக்கு மின்விசிறி ஓயாத கைப்பேசி!
ஒழிச்சல் இன்றி!
களிக்கஅழச் செய்யுதொலைக் காட்சியொடு சமைக்கபல!
கருவி கண்டோம்!!
குளிப்பதற்கு வெந்நீரும் குடிப்பதற்குக் குளிர்நீரும்!
கொடுப்ப தற்கும்!
எளிதாகப் பலகருவி எல்லாஊர் கடைகளிலும்!
இன்று உண்டே! !
உடனடியாய்க் கணக்கிடற்கு ஓர்கருவி! எதுகுறித்தும்!
உங்கள் ஐயம்!
உடனேயே தீர்த்திடற்கு உண்டுகணிப் பொறிமேலும்!
உழவு செய்ய!
நடவுநட கதிரறுக்க நன்றாய்நெல் பிரித்தெடுக்க!
நாட்டில் இன்று!
மடமடெனப் பலபொறிகள் மலிந்தனவே! மிகவிளைய!
மண்ணுக் கேற்ற!
பல்வேறு உரங்களொடு பயிர்கெடுக்கும் பலவகையாம்!
பூச்சி கொல்ல!
வல்லபல வேதிகளும் வகைவகையாம் நச்சுகளும்!
வந்த திங்கே!!
செல்லபல இடங்கட்கும் சிறப்பான விரைவூர்தி!
செய்துள் ளாரே!!
நல்லபல வசதிகளும் நாம்பெற்றோம் அறிவியலால்!
நன்மை யுற்றோம்!!
விண்வெளியில் திங்களிலே வேறுபல கோள்களிலே!
வியக்கும் வண்ணம்!
நுண்ணியபல் லாய்வுகளும் நொய்ப்பமுற செய்கின்றார்!
நோக்கில் ஒன்றி!!
எண்ணிலவாய் முன்னேற்றம் எழுந்துளது மருத்துவத்தில்!
எல்லா நோய்க்கும்!
ஒண்ணலுறும் மருந்துகளும் உருவாக்கி உள்ளநிலை!
உணர்ந்தே உள்ளோம்!!
இவ்வளவும் அறிவியலில் இனும்பலவும் முன்னேற்றம்!
இருந்தபோதும்!
செவ்வையிலாச் செயற்கையினால் சீர்குலைவால் நீர்காற்று!
செம்மை கெட்டும்!
ஒவ்வாத பல்வேறு உரங்களினால் மண்வளமும்!
ஒழிந்து போக!
நொவ்வுற்றோம்! அறிவியலை நொய்ம்மையிலா முன்னேற்ற!
நோக்கில் ஆள்வோம்

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

என் வீட்டு தலையணை

சீமான்

என் கனவுகளை,
கவிதைகள் தின்று,
எச்சத்தை
என் வீட்டு தலையணை தின்று
பெருத்து கிடக்கிறது

அதுவும்
காதல் கற்று கொண்டது போல
துணை வேண்டி
ஆர்ப்பாட்டம் செய்கிறது
இரவில் அதன் தொல்லை
தாங்கமுடியவில்லை

நீயாவது ஜோடியோடு இரு
என்று துணைக்கு ஒரு
தலையணை வாங்கி போட்டேன்
இப்போதெல்லாம் அவர்கள்
செய்யும் குறும்புகள்
தாங்கமுடியவில்லை

வழக்கமான காதலர்கள் போல்
தொட்டுக்கொள்ள ஆரம்பித்து
இப்போது கட்டிக்கொள்ளும்
வரை வந்து நிற்கிறது

தலை அணைப்பதற்கு பதிலாய்
தலைவனையே அணைத்து கிடக்கிறது
தலைவி தலையணை

உயரம் வேண்டி அடுக்கிவைத்து
உறங்கும்போது
முத்த சத்தம்வேறு
இரண்டாம் சாமத்தில்

அவள் நினைவில் கட்டிக்கொண்டு
உறங்கும்போது
அவைகள்
உறங்குவதும் இல்லை
உறங்க விடுவதும் இல்லை
அரை தூக்கம் குறை தூக்கமாய்
இருந்த என்னை
அறவே தூக்கம்
இல்லாமல் செய்து விட்டன

உறை மாற்றும் வேளையில்
வெட்கப்பட்டு போர்வைக்குள்
ஒளிந்து கொள்கின்றன...

இப்போதெல்லாம்...
ஏன்டா எங்களை
இருவேறு உறைகள் இட்டு பிரித்து
வைக்கிறாய் என்று திட்டி
தீர்த்துவிடுகின்றன

என் கண்ணீர் தொட்டு
கவிதைகளும் எழுத கற்று
கொண்டு விட்டன.

ஒரேஒரு குறை,
அவைகள் இன்னும்
குட்டிபோட
கற்றுக்கொள்ளவில்லை