நிஜம் - சு.மு.அகமது

Photo by Jr Korpa on Unsplash

மரணத்தின் செந்நாவு
சுழன்று உறிஞ்சுகிறது
உயிரின் கடைத்துளியை

நினைவு செதுக்கின நறுமணத்தில்
பொதிந்து தவழ்கிறது உறவு

உச்ச பட்ச தேவைகளின் நிமித்தம்
அடிப்பணிகிறது மனசு
ஏற்றுக்கொள்ளவியலாத தருணமாய்

எதிர்படும் நிலைக்களனில்
பதிய முடியாத வேர்களுடன்
பரவிப்பாய எத்தனிக்கிறது விருட்சம்
நிலைக்கொள்ளா ஆட்டத்துடன்

இடறிடும் மூச்செரிவில்
இரணப்பட்டு போகும் உணர்வு
மணல்வெளியின் கரிசல் கோடாய்

பொழுதின் இரணமாறி விழிக்கையில்
நிஜம் சுமந்து நிற்கிறது
வாழ்க்கை
சு.மு.அகமது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.