தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அதனால் என்ன?

ஞானக்கூத்தன்
 பாடச் சொன்னால் வெட்கப்படுகிறார்கள்
பேசச் சொன்னால் கூச்சப்படுகிறார்கள்
ஆடச் சொன்னால் கோணுகிறார்கள்
நடிக்கச் சொன்னால் தயங்குகிறார்கள்
வரையச் சொன்னால் வராதென்கிறார்கள்
கவிதை வருமா என்றால் உடனே
எண்பது பக்க நோட்டுப் புத்தகம்
இரண்டை எடுத்து நீட்டுகிறார்கள்.

அதனால் என்ன?- 

உரத்த பந்தங்கள்

மது மதி
எந்த உறவைச் சொல்லியும் 
நூறு வீதம் உன்னை நீ
அடையாளப்படுத்த முடியாது
அம்மா என்று சொன்னால்
நீ மகனாகவும் இருக்கலாம்
மகளாகவும் இருக்கலாம்

மகன் என்று சொன்னால்
நீ அப்பாவாகவும் இருக்கலாம்
அம்மாவாகவும் இருக்கலாம்
அண்ணா என்று சொன்னால்
நீ தம்பியாகவும் இருக்கலாம்
தங்கையாகவும் இருக்கலாம்
தாத்தாவுக்கும் அப்படித்தான்
பாட்டிக்கும் அப்படித்தான்
பேரனுக்கும் அப்படித்தான்
பேத்திக்கும் அப்படித்தான்
மாமாவுக்கும் மாமிக்கும்
மருமகனுக்கும் மருமகளுக்கும்
சித்தப்பன் சின்னம்மா
அனைவருக்கும் அப்படித்தான்
காதலன் என்று நீ சொன்னால்
நிச்சயம் காதலி நீ
கணவன் என்று நீ சொன்னால்
நிச்சயம் மனைவி நீ
இரத்த பந்தங்களை விட
உன்னை அடையாளப் படுத்தும்
உரத்த பந்தங்கள் இவை
 

விசித்திரப் பறவை

கவித்தாசபாபதி
ஒரு சிறகு
கறுப்பு
மறு சிறகு
வெளிச்சம்
எந்தவொரு
வீதியிலும்
இரை கொத்தாமல்
எந்தவொரு
கிளையிலும்
இளைப்பாறாமல்
என்னமாய்...
வேகத்துடன் பறக்கிறது
காலக்கிளி

நன்றிக்கடன்

ரசிகவ் ஞானியார்
அலட்சியமாய் களைந்த
ஆடைகளையெல்லாம்
பொறுக்கி எடுத்து ...
துவைத்து வைப்பாள்!

தன் வயிறு
காய்வதைப்பற்றி
கவலைப்படாமல் ...
துணிகளை காயவைப்பதில்
கவனமாய் இருப்பவள்!


மிச்சம் ஏதுமின்றி
தின்று வீசிய
பாத்திரங்களை ...
பத்திரமாய் பூசி விடுவாள் !

நாங்கள் வேண்டாமென்று
ஒதுக்கிய உணவுகள் ...
அவளுக்கு அமுதம் !

சொந்தக்குழந்தை
வீட்டில் அநாதையாய் இருக்க...
எங்கள் வீட்டுக்குழந்தைகளை
சொந்தமாக்குபவள்!

ஒருநாள் வராவிடினும்...
வீட்டை கூவம் என்று அழைப்போம் !

இப்படி
விவரம் தெரிந்த நாள்முதல்
அறிவிக்கப்படாத உறவாக,
வலம் வருபவள்!

இன்று காலைதான் செய்தி வந்தது:
என் வீட்டு
வேலைக்காரி இறந்துவிட்டாளாம்!
அய்யோ!
நாளை
தேங்கும் வேலையை
யார் செய்வதாம்?

ஊமையரின் கதையாடல்

சு.மு.அகமது
ஒரு கவிதையின்
பகிர்ந்தளிப்பைப்  போலும்
அவர்களது கதையாடல்

செவிசாய்த்து
உன்னிப்பாய் கிரகிக்கும்  பாவனை
தேர்ந்த சொல்லாடலின்  சுவராஸ்யத்தை
உட் செலுத்தும் புத்துயிர்ப்பி

கடந்து சென்ற  பள்ளிக்க்கூடம்
பேருந்துப்பார்வையில் புள்ளியான பின்பும்
கண்களில் விரிந்திருந்த்து
அதில் கழித்த காலம்

நிரம்பி வழிந்த சம்பாஷணையில்
நாவின் தீயொலியற்ற
விரல் மொழியால்
ஊமையனாய் நானும்
கதைப்பவர்களாய்  அவர்களும்....
பேருந்து இரைச்சலோடு தனது இலக்கு நோக்கி...
என்னை செவிடாக்கியபடி

விடையில்லா தேடல்

பிரவீன் குமார் செ
தேடினேன்
தேடினேன்
நீண்ட நாட்களாய் தேடினேன்
கிடைக்கவில்லை!

தொலைந்த இடம்
தெரியவில்லை.
தொலைத்த இடம்
தெரியவில்லை.
அட
இதயம் கூடவா
திருட்டு போகும்!

ஆனால்
அதை திருடியது அவளென்றறிந்து
என் இதயம் திரும்பக்கேட்டேன்.
மறுத்துவிட்டாள்.

சரி,
என் இதயம் தான் கிடைக்கவில்லை,
அவள் இதயமாவது கிடைக்குமென்று
தேடினேன்.
தேடினேன்.
அதுவும்,
கிடைக்கவில்லை.

அடிப்பாவி!
உனக்கு இதயமே இல்லையா

எனக்கான தீர்ப்புகள்

நிலாரசிகன்
 
நிறைய எழுதவேண்டியதிருக்கிறது
என்னைப் பற்றி.
எதையும் பற்றாமல்
எதைப்பற்றியும் இல்லாமல்
என்னைப் பற்றிக்கொண்டு எழுதியாகவேண்டும்.
எனக்கு மட்டும் தெரிந்த
வலி
கனவு
வாழ்க்கை
கண்ணீர்
கவிதை
நீ
நான்
நாம்
அவர்கள்
அனைத்திற்குமான தீர்ப்புகள்
எழுதியே தீர வேண்டும்.
உச்சரிக்கும் முன்பே
ஊமையாகிப் போன
பேனாவை வைத்துக்கொண்டு
எதை எழுதுவது?

- நிலாரசிகன் (http://www.nilaraseeganonline.com/)

மனதின் குரல்

திவ்யபாலா
புரியாத புதிராய்,
விளங்காத வரியாய்,
இருந்தும் இல்லாமலும்,
உணர்ந்தும் உணராமலும்,
நட்பில் ஓர்
தயக்கமாய்...
தொடர்கிறது என் பகிர்தல்...
உன்னுடன்.
கேள்விக்குறியாக

பிடித்திருக்கிறது

இளந்தமிழன்
 
இயற்கை பிடித்திருக்கிறது
அதில் செயற்கை பிடிக்கவில்லை!
நிலவு பிடித்திருக்கிறது
அதன் கண்ணாமூச்சி ஆட்டம் பிடிக்கவில்லை!
நட்சத்திரம் பிடித்திருக்கிறது
அதன் தூறம் பிடிக்கவில்லை!
மழை பிடித்திருக்கிறது
அதில் நனைய பிடிக்கவில்லை!
காதல் பிடித்திருக்கிறது
அதன் லீலை பிடிக்கவில்லை!
நட்பு பிடித்திருக்கிறது
அதன் தெளரகம் பிடிக்கவில்லை!

தனிமை பிடித்திருக்கிறது!
அதில் கனவு பிடித்திருக்கிறது!
கனவில் கற்பனை பிடித்திருக்கிறது
அதில் காதல் பிடித்திருக்கிறது!
காதலில் என்னை பிடித்திருக்கிறது!!!!!!
 

சகா யார் நீ?

மலர்
சகாக்கள் பலர் உண்டு
ஆனால் அவன் ஒருவனை மட்டும்
கேட்டேன்....யார் நீ என்று?

சிரிக்க வைக்கிறாய்...
நீ இல்லையெனில்
சிறகிழக்க செய்கிறாய்...

அழ வைக்கிறாய்...
உன் அரவணைப்பில்
அழுகையை ரசிக்க செய்கிறாய்...

என்னை வெறுத்த காதலை
கை விட்டேன்...சகா!
உன் கரங்களை பிடித்து கொண்டு!

கவலையை தொலைத்தேன்
சகா...உன் கைகுட்டையின் சுவரிசத்தில்..!

உன் நட்பின் ஈரம்
என் விழிநீரை துடைத்தது...

என் உவகையின் உவமை நீ!
என் வாழ்க்கையின் வழித்தடம் நீ!
என் நினைவின் நிழற்படம் நீ!

ஆயினும் உன்னை கேட்டேன்...
யார் நீ என்று?

உன் உறவின் ஈரம்
என் உயிரிலே உறைந்திருப்பதை
எப்படி உணர்த்துவேன்?

நட்பின் விளிம்பில் தத்தளிக்கிறேன்!
நம் உறவு என் திருமணத்தால்
முறிவதை எண்ணி...


சகா யார் நீ?
ஏன் வந்தாய்?
என் செய்கிறாய்?
என்னிடம் ஏன் நட்பை விளித்தாய்?

உன் துணையின்றி
என் ஓடம் கரை சேருமா?
விழைகிறேன்...

நீ எனக்காய்...
என் வாழ்க்கை துணையாக...!

உறவுகளை
கொச்சைப் படுத்தவில்லை!
ஆனால்...

உணர்வுகளை
உரசிப் பார்க்கிறேன்...

உன் சிறகின்றி
நான் உயிர் வாழ்வேனா என்று?

உரைப்பாயா உன் பதிலை