மானுடம் வெல்லும் - ப.மதியழகன்

Photo by Pawel Czerwinski on Unsplash

பிணவறையில் உறங்குகின்றன
தெய்வங்கள்
பூசைகளை ஏற்றுக் கொண்டு
நாட்களை ஓட்டி இருக்கலாம்
பிரார்த்தனைகளை செவிமடுக்காமல்
பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கலாம்
பக்தர்களின் பாலாபிஷேகத்தில்
உள்ளம் குளிர்ந்திருக்கலாம்
அடிமுடியைத் தேடியபடியே
சென்றிருந்தாலும் பிரச்சனையில்லை
அதிகாரமற்ற அலங்காரப் பதவியில்
வீதியுலா சென்றிருக்கலாம்
பாதாள அறை பொக்கிஷங்கள்
பறிபோய்விட்டதை எண்ணி
மனம் கலங்கியிருக்கலாம்
வரம் வாங்கி திரும்புபவர்களின்
வாகனங்கள் எப்படி
விபத்தில் சிக்குகின்றன
என்ற கேள்வி உதிக்காமல்
இருந்திருக்கலாம்
அவதாரங்கள் பக்கமே
தர்மம் இருந்ததாக
புத்தகங்களில் படித்திருக்கலாம்
விதி என்ற பெயரில்
மக்களின் வாழ்க்கையில்
விளையாடாமல் இருந்திருக்கலாம்
தான்தோன்றித் தனமாக
செயல்படாமல் இருந்திருந்தால்
சரண கோஷம் எழுப்ப
ஆட்கள் கிடைத்திருப்பார்கள்
மரணத்தை வைத்து
பூச்சாண்டி காட்டாமல்
இருந்திருந்தால்
எல்லா கடவுளர்களும்
தற்கொலை செய்து கொள்ள
வேண்டியிருந்திருக்காது
மரணத்தை ஒருவன்
வென்றால் கூட
கடவுளின் நிலை
கேள்விக்குறிதான்
ப.மதியழகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.