தேசிய திருவிழா - முருகடியான்

Photo by Brian Kyed on Unsplash

மான்பிடித் தேயிரை யாக்கிட ஓடிய!
மாவரி மாநிலத்தை... -கடல்!
மீன்பிடிப் பார்சிலர் மேவிய குடில்களும்!
மின்மினிக் காநிலத்தை...!
தேன்குடித் தாடிடத் தேன்மலர் சூடிடத்!
திருத்திய தாருழைப்பு? –ஒளி!
வான்கதிர் நிலவுடன் வையம்பு கழ்ந்திட!
வைத்தது நம்பிழைப்பு!!
காட்டுடன் மேட்டையும் கல்லுடன் முள்ளையும்!
கடந்தன நம்கால்கள் -எழில்!
வீட்டையும் பாட்டையும் வியர்வையி லெழுதி!
விளைந்தன நம்தோள்கள்!!
பசிக்கடி உள்ளுற கொசுக்கடி வெளியுற!
பட்டது யாருடம்பு? -உயிர்!
பொசுக்கிடு வாரிடம் பூவென நசுங்கிய!
தமிழரென விளம்பு!!
காற்பந் துதைப்பதைப் போலுதைத் தாரந்தக்!
காலத்தை எண்ணுகிறேன்! -இன்று!
நாற்பத் திரண்டக வைப்புத் தமுதத்தை!
நானள்ளி உண்ணுகிறேன்!!
வையகம் கையக மாக்கிவிட் டோமிந்த!
வாழ்வை உயர்த்திவிட்டோம்! -பெரும்!
பொய்யகத் தாரையும் தூக்கிவிட் டோம்வளம்!
பூத்திட ஆணையிட்டோம்!!
கண்ணீர்த் துளிகளை வைரங்க ளாக்கிடக்!
கையிரு நான்குபெற்றோம்! -நம்மேல்!
வெந்நீரை யூற்றிய வீணர் விழிபெற!
வீரப் படையும்பெற்றோம்!!
வானிலோர் தண்ணிலா வையத்தி லின்நிலா!
தானவள் சிங்கையம்மா! -மக்கள்!
ஊனிலு முயிரிலும் மொன்றிக் கிடந்திடும்!
உண்மையே சிங்கையம்மா!!
எப்படி வந்ததிப் படியொரு வளமெனத்!
தப்படிப் பார்நினைக்க... -உழைப்!
பைப்படி யாகவே எண்ணி நடந்தவர்!
உயர்வென உலகுரைக்க...!
முப்படி ஒருபடி சமய வெறிப்படி!
முனைமழுங் கும்படியாம்! -இனத்!
தப்படி வேற்றுமை சட்டம் சமத்துவ!
சார்ந்த முறைப்படியாம்!!
தூசித் துகள்களைத் தட்டித் துலக்கிய!
தூய திருநிலத்தை -எழில்!
வீசுங் கொடியசைந் தாடுந் திருவிழா!
தேசிய நாள்விழாவே!!
- பாத்தென்றல்.முருகடியான்
முருகடியான்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.