ஒரு குடிமகனின் தீர்மானம் - எசேக்கியல் காளியப்பன்

Photo by FLY:D on Unsplash

செத்துச் செத்து வாழ்வதைநான் விட்டுவிட்டேன் -இனிச்!
சீவனுடன் வாழ்வதற்குக் கற்றுவிட்டேன்!!
புத்திகெட்ட செயல்களையும் விட்டு விட்டேன்!` -இனிப்!
புதுவாழ்வு வாழ்வதெனத் துணிந்து விட்டேன்!!
முத்து முத்துக் குழந்தைகளின் முகம்நினைத்தேன் -அவர்!
முகம்தொலைத்த சிரிப்புகளுக்கு இனியுழைப்பேன்!!
சக்திகெட்டு வாழ்வதுவும் வாழ்க்கையில்லை -பலர்!
சக்திபெற நானுழைப்பேன்! தாழ்வுமில்லை!!
ஆசையெனும் மயக்கினிலே அமிழ்ந்துவிடேன்! -வெட்டி!
அரசியலில் குரல்கொடுத்துத் தவழ்ந்துகெடேன்!!
கூசியினி இலவயங்கள் மறுத்திடுவேன்! -நாட்டைக்!
கூறுகட்டி விற்பவரை வெறுத்திடுவேன்!!
மொழிசாதி மதம்,இனத்தை மறுத்திடுவேன்! -தேச!
முன்னேற்றம் தடுப்பவரை அறுத்திடுவேன்!!
விழிமூடிப் பலபொறுத்த நிலைவிடுத்தேன்! -எந்த!
வேலையிலும் ஊழலறத் தலையெடுத்தேன்!!
மத்தளம்போல் அடிவாங்கி அழுதவொலி -இனி!
மாறிவிடும்! புதுராகம் எழுந்ததடி!!
வாழ்ந்தநடை மாற்றியிதோ எழுந்துவிட்டேன்! -பூமி!
வாழ்த்துமொலிப் பட்டாசாய் முழங்குதடி!!
எசேக்கியல் காளியப்பன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.