நான் இறங்கிச் செல்வேன் - வையவன்

Photo by Jr Korpa on Unsplash

முதல் மாடியின் கைப் பிடிச்சுவர்
பிடித்து நான் கவனிப்பேன்
எதிர் மரங்களில் அமர்ந்து
காக்கை நேசர் ஒருவர் பிட்டுப் பிட்டு
எறிகிற இட்டிலித் துண்டுகளுக்காக
காக்கைகள் தம் மொழியில்
கூவிக்கரைந்தே நன்றி தெரிவிப்பதை,
உயரத்தில் இருந்து தாழ்ந்து அவை
கொத்திச் செல்வதை ,
நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்
எல்லாம் தீர்ந்ததும் வரும்
விளங்காத மொழியை
வீம்புக்குக் கற்றுக்கொண்டிருக்கும்
என் மகளின் பள்ளிக்கூட பஸ்
இறங்கிச்செல்வேன் அவளை
அனுதாபத்தோடு அனுப்பி வைக்க

மாலை வந்துவிடும்
நான் வேலை முடிந்து திரும்பும் வேளையில்
அதே மரங்களில் இப்போது புறாக்கள்;
காதலுக்குத் தூது விட்ட
மன்னர்களை நினைத்தபடி
பார்த்துக் கொண்டே நிற்பேன்
நாட்டியம் ட்யூஷன் முடித்து வரும்
மகளின் வரவை எதிர்நோக்கி
சைக்கிளில் பூ விற்பவன் மணியடிப்பான்.
சாலை ஓரத்துப் புல்
அசையும் காற்றில்.
மூழ்கத் தொடங்கியிருக்கும்
சூரியன் மேற்கில் .
நான் இறங்கிச் செல்வேன்
வையவன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.