தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

வட்டத்துக்குள் வாழ்க்கை

ப. மதியழகன்
வாழ்க்கை சலிப்பூட்டுகிறது
எத்தனை பகல்கள்
எத்தனை இரவுகள்
எத்தனை மனிதர்கள்
ஏதோ இருப்பது போலும்
ஒன்றுமே இல்லாதது போலும்
தோன்றுகிறது
தூரத்தில் கயிறுதானேயென்று
அலட்சியமாக வந்தால்
கிட்டத்தில் பாம்பாகிறது
துரோகக் கழுகு
என்னை வட்டமிடுகிறது
எங்கு போயினும்
மரண சர்ப்பம்
என்னைத் துரத்துகிறது
வாழ்க்கை வட்டம்
நிறைவுறும் போது
எனக்காக எதுவும்
மிச்சமிருக்காது
மாம்சம் சாம்பலாகும்
நினைவுகள் சூன்யமாகும்
இன்னார் இருந்தாரென்பதை
இவ்வுலகம்
சீக்கிரத்தில் மறந்து போகும்

கவிதை மயக்கம்

பனிதுளி சங்கர்
இதழ்கள் சொல்லாத
உன் இதயத்தின் இரகசியம் ஒன்றை
காதல் என காட்டிக் கொடுக்கிறது என்னிடம் .
நீ காகிதத்தில் கிறுக்கியக் கவிதையொன்று !

கட்டி அணைக்க இயலாத எழுத்துக்களிலும்,
மறைத்து வைக்க இயலாத ஊடல்களிலும்
மெல்ல மெய்மறந்து உறங்கிபோகிறேன்
உன் கவிதை தீண்டிய மயக்கத்தில்
காதல் உண்ட மங்கையென

வெட்கங்களை அள்ளி பூசிக்கொள்…

ப்ரியன்
மேல் இதழ் முதல்வரி
கீழ் இதழ் மறுவரி
உன் இதழ்கள்
எனக்கான இருவரி கவி

நீ
அழகுக்கான
அளவுகோல்!

கவிதைகளில்
உண்மையை மட்டும் எழுதிவிடுகிறேன்
உன்னழகை எழுதும் வேளைகளில்.

தூண்டிவிடுவது என்னவோ
உன்னழகு
பழி மட்டும் என் மேல்.

கைகட்டி அமர்ந்திருக்கிறாய்
நல்ல பிள்ளையாய்;
உன் அழகு போடுகிறது
குத்தாட்டம்!

நான் கொள்ளை அடிக்க அடிக்க
கொஞ்சமும் குறைவதில்லை
உன்னிடம் அழகு…

உன் அழகுக்கு அழகுகூட்ட
முகப்பூச்சு ஏதும் வேண்டாம்
உன் வெட்கங்களை அள்ளி பூசிக்கொள் போதும்…

இருத்தல்

ரேகா ராகவன்
இருந்தால்.......

மென் ரோஜா மொட்டொன்றில்
பூவாய் அமர்ந்துக்
கதிரவனைத் தன்னுள் பூட்டியிருக்கும்
ஒரு பனித்துளியாய்......

கோடைக்காலத் தாகத்தில்
உதட்டின் மேல்
லேசாய் வந்துவிழும்
ஒரு மழைத்துளியாய்.....

இருத்தல் வேண்டும்.

எண்ணங்கள் தேக்கி
எட்டி நடக்கையில்

தன் இருத்தலைத் தெரிவிக்கத்
தொலைவிருந்த நீர்வீழ்ச்சி
மயிலிறகாய் முகத்தில் தெறித்துது
ஒரு துளி நீர்

சிறகடிக்கும் கண் மூடித்
துடிக்கும் இதயம் அடக்கி
இத்துளியை ஸ்பரிசித்த ஒரு நொடியில்
அனைத்தும் அடைந்துவிட்ட
ஒரு பரிபூரணம்

இனி இருத்தலில்
தான் என்ன அவசியம் ?

ததும்பி வந்து
இமை உறுத்திப் பிரித்துத்
தன் இருப்பை உணர்த்தி
என் இருத்தலின் அவசியத்தை
உறுதிப்படுத்தியது
ஒரு துளிக் கண்ணீர்...

- ரேகா ராகவன் (நன்றி : திண்ணை)

வாசல்

சா.துவாரகை வாசன்
இரு கண்கள் மனதின் வாசல்
சிறுசிறு கருத்துக்கள் கவிதைக்கு வாசல்
உயர்குணம் நல் புகழ் கோட்டைக்கு வாசல்
அடக்கும் நல் உயர்நிலைக்கு வாசல்
கேள்வி தெளிவுக்கு வாசல்
உழைப்பு வெற்றிக்கு வாசல்
குற்றம் சீர்குலைவுக்கு வாசல்
மனமாற்றம் நல் வாழ்வுக்கு வாசல்

நான் என்னை மேலும் சமைக்கிறேன்

அழகிய பெரியவன்
 என் எண்ணத்தைப் பிட்டுனக்கு
தின்னத்தந்தேன் நேற்று

எண்ணம் உயிரைப் போன்றது
ஆகையால்
என் உயிரைத்தான் தந்தேன்

பின்பொருநாள்
என் கருத்தை செரிக்க முடியாமல்
உபாதை ஏற்பட்டதாகச்
சொன்னாய்

உனக்கு ஏற்கும் வகையில்
எந்த அளவுக்கு
என் சிந்தனையை
மசிய வேகவைத்துத் தர வேண்டும்
என்ற பக்குவம் தெரியவில்லை

உயிர்ச் சத்துகள்
வீணாகாமல் இருக்க
சில நேரத்தில் உணவு
அரைவேக்காட்டுப் பதத்தில்
இருக்க வேண்டும்
என்பது உனக்கும் தெரியும்

கருத்துச்சிக்கலும்
வயிற்றுச் சிக்கலும்
இப்படி முரண்படுகிறபோது
என்ன செய்யலாம் அன்பனே

எல்லாமும் ஏற்கும்படி
நீ உன்னை
பண்டிதம் பார்
எல்லார்க்கும் ஏற்கும்படி
நான் என்னை
மேலும் சமைக்கிறேன்  

காதல் விருட்சம்

கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி
  வெறும் சதை என்று
வியாக்கியானம் பேசித் திரியும் என்னுள்
எப்படி நீ
விதையானாய்?

பாறையாய் இறுகி இருந்த என்னுள்
எப்போது நீ
உன் வேர்களை நுழைத்தாய்?

உத்தரவில்லாமல்
என் கனாக்களில்
பூவாய் சிரித்து
ஏனடி நீ
உலா வருகிறாய்?

ஒற்றுக்களே சரியாகத் தெரியாத என்னுள்
கவிதைக் காய்களை
பழுக்க வைத்தது எவ்வாறு?

என்னைச் சுற்றிலும்
விருட்சமாக வளர்ந்து
சுகமான தனிமைச் சிறையில்
என்று எனை அடைத்தாய்?

  உன் நிழல் ஒன்றே
என் வாழ்க்கை என
மாறிப் போனது எந்தத் தருணத்தில்?

எல்லாம் சரிதான்
உனக்கு மட்டும் ஏனடி
மிதித்துச் செல்லும்
தரைபடர் புதராகிப் போனேன்
நான்?
 

விழிகளின் வலிகள்

மீனாள்செல்வன்
தொட்டுவிடும் தூரத்தில் நீ
ஆனால் நமக்குள்ளே
ஒரு ஜென்மத்தின் இடைவெளிகள்.

எனக்குள்ளே என் சுகம்போல
என் வலிகளும்...
உறவின் சந்தோசத்தைக்கூட
பிரிவின் வேதனையுடன் அனுபவிக்கும்
என் பொழுதுகளில்
இன்னும்தான் வாழ்கிறேனா என்று
எனக்குள் நானே அடிக்கடி கேட்டு
மீண்டும் மீண்டும் பூத்து
மீண்டும் மீண்டும் வாடி
மாலைக்கும் ஆகாத
செடிக்கும் ஆகாத  மலர்போல
எல்லாம் முடிந்துபோன ஒரு வாழ்வின்
கனவுகளில் மீண்டும் நுழைகிறேன்.
உந்தன் கைவிரல்களை
எட்டிப் பிடிக்கும் பேராசையில்
தன்னைக் கடந்து போனவனிடம்
யாசித்து ஏங்கும்
பிச்சைக் காரனைப் போல.
சீ... என்ன கேவலம்
கண்விழித்திருந்தாலும்
கனவுச் சுகத்தில்
காலங்களைத் தின்று தீர்க்கிறது
எனது காதல்

இன்றா சுதந்திரம்?

இட்ரிஸ் பாண்டி
இணையற்ற
இந்தியாவிற்கு
இன்றா
சுதந்திரம்???

ஊரை அடித்து
உலையில் போடும்
ஊழல் பெருச்சாளிகளிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
பூமத்திய கோட்டையே
புவியிலிருந்து விரட்டிய
வறுமைக் கோட்டிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
சொர்க்க பூமியதை
இரத்த பூமியாக்கிய
ஈனப் பிறவிகளிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
சாதியின் பொயரால்
சண்டையிடும்
சண்டாளர்களிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
பெண்மையைப்
பேணிடாத
பேடிகளிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
கையூட்டினால்
கொழுத்திட்ட
களவாணிகளிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
மதத்தின் பெயரால்
மனிதத்தை கொல்லும்
மனித மிருகங்களிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
கல்வியினை
காசுக்கு விற்றிடும்
கயவன்களிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
காவல்துறையை
களங்கப்படுத்தும்
கருங்காலிகளிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
மருத்துவத்துறையின்
மாண்பினை மறந்திட்ட
மானமிழந்தவரிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
ஓட்டுக்காக மட்டும்
ஒன்றுகூடிடும் பச்சை
ஓணான்களிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
தேர்தலன்று மட்டும்
தேடி வந்திடும்
தேச துரோகிகளிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
தாய்மொழியினை
தலைகுனிவாய் நினைக்கும்
தருதலைகளிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
ஆன்மீகமதன் பெயரால்
அநியாயம் செய்திடும்
அதர்மிகளிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??
இப்போது
கூறுங்கள்
இன்றா சுதந்திரம்
இந்திய தேசத்திற்கு!!
 

சாமி(யார்)

பாண்டூ
அமைதி முகம்
அருளும் கரம்
நவீன வியாபாரத்தில்
இது தனி ரகம் !

இந்த அவதார உலா...
கடவுளின் கடாட்சத்தாலா?
இல்லை
கயவர்களின் கைங்கரியத்தாலா?

இவர்கள்...
அவதரிக்கும் போதெல்லாம்,
அதர்மம் தலைதூக்கும்!

ஆசிர்வதிக்கும் போதெல்லாம்,
அஞ்ஞானம் அருளப்படும்!

தலையாட்டினால் பக்தன்...
கேள்வி கேட்டால் பித்தன்...
நல்லதென்றால் அவன் செயல்...
அல்லதென்றால் இவன் விதி...
இவர்கள் பிழைப்பிற்கு,
இதுவே நல்ல வழி ?!


இவர்கள்...
பற்றற்றவர்கள்...
அதனால்தானோ
வரவை மட்டுமே பார்க்கிறார்கள்!

இவர்களது ஆசிரமங்கள்
கருப்புப் பணத்தின்
காக்கைக் கூடுகள் !

ஏழு சக்கரங்களைப் பற்றி சிலாகித்தாலும்..
இவர்களது இறுதிக்காலம் என்னவோ
சக்கர நாற்காலியில்தான்...

தீராத நோயெல்லாம் 'சத்ய'மாய்
தீர்ப்பார்கள்...
இவர்களுக்கொன்றென்றால்
அவசரப் சிகிச்சைப் பிரிவில்
சேர்ப்பார்கள் !


இவர்களது ஆனந்த அலைகள்
மன்மத வளையங்களை
எழுப்பத் தவறுவதே இல்லை !

'நித்ய' கண்டத்திலிருந்து
தப்பித்தோர்க்கே வெளிச்சம் !

மனிதக் கண்களில்
மிளாகாய்ப் பொடித் தூவும் இவர்களால்...
கேமராக் கண்களிலிருந்து
தப்ப முடிவதில்லை !

இவர்களா நமக்கு
வாழும் கலையை
போதிப்பது ?

பக்தர்களே!
உங்களுக்கு பட்டை நாமம்
'பாபா'க்களுக்கோ கொள்ளை லாபம்!

கால் கழுவக்கூட
காசு வாங்கும் இவர்களைக்
கை கழுவுங்கள் !

உதிர்ந்த மயிரைக் கூட
இவர்களால் ஒட்டவைக்க முடியாது
உணருங்கள் !

விழித்திருங்கள்...
இதுவே சிறந்த தியானம்!
விவேகானந்தரின் விவேக மொழி !

இனியாரும்,கண்களை மூடச்சொன்னால்...
காதுகளை மூடுங்கள்!
முடிந்தால்...
ஆசிரமங்களையும் !!