ஆனந்த அருவி - பாவண்ணன்

Photo by eberhard 🖐 grossgasteiger on Unsplash

அடர்ந்த மனஇருட்டில்
அடுக்கடுக்கான மலையிடுக்கில்
எங்கோ அடைபட்டுக் கிடக்கிறது
ஆனந்த அருவியின் ஊற்று
பாயும் இடமெங்கும் குளுமை
பனிச்சாரல் ததும்பும் புகைமுட்டம்
தாவி இறங்கும் வழிநெடுகத்
தழுவிப் புரளும் குளிர்த்தென்றல்
பாறையோ மரமோ செடியோ
எதிர்ப்பட்டதை இழுத்தோடும்
ஊற்றுக் கண்ணில் துருவேற
ஊருராய் அலைகின்றேன்
சுமைகூடி வலிகூடி
இமைமுடாது திரிகின்றேன்
உச்சிமலை அருவியின்கீழே
உடல்நனைய மனம்நனைய
ஒற்றைக் கணப்பொழுதில்
துருவுதிர தடையுடைய
பொங்கி வழிகிறது ஆனந்த அருவி
தோள்தழுவி முகம்தழுவி
இரண்டு அருவிகளும் இணைந்து வழிகின்றன
இன்பச் சிலிர்ப்பை
எடுத்துரைக்க மொழியில்லை
ஆதிப் பாறையென
அங்கேயே நிற்கின்றேன்
அனைவரையும் தாண்டி
வழிந்தோடுகிறது அருவி- 
பாவண்ணன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.