சுகப் பிரசவம் - அருட்பெருங்கோ

Photo by Gradienta on Unsplash

“வலி வரலைன்னா
சொல்லும்மா சிசேரியன்
பண்ணிடலாம்”
-கேட்ட மருத்துவரிடம்,
வேண்டாமென மறுத்துவிட்டேன்!
பெத்தவருக்கு தான்
பெருஞ்செலவு ஆகுமென்று!
வலியை வரவழைக்க
வலிய முயன்றேன்!
எனிமா ஏற்று
குடலை சுத்தமாக்கி,
புடவை அவிழ்த்து
இரவுடை தரித்து,
முக்கத் தொடங்கினேன்
கட்டிலில் படுத்து!
பற்றிக்கொள்ளத் துணையைத் தேடி
கட்டில் கம்பியைப் பற்றிக்கொண்டு,
விழிகளைப் பிதுக்கி,
பல்லைக் கடித்து,
அடிவயிறு உப்பி,
கால்களை உதறி,
முக்கி முக்கி,
உந்தி உந்தி
தள்ளுகிறேன் ஓர் உயிரை,
உலகைக் காண!
முகமெல்லாம் வியர்த்து,
உடல் தளர்ந்து,
உள்ளமும் சோர்ந்து,
உள்ளே, செத்துப்
பிழைத்தேன், நான்!
வெளியே, சொன்னார்கள்:
“சுக“ப் பிரசவம் என்று!
 
அருட்பெருங்கோ

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.