விழுங்கித் தொலைத்த மானுடம் - வித்யாசாகர்

Photo by Joel Filipe on Unsplash

"எங்கோ எதற்கோ
விழுங்கித் தொலைத்த மானுடம்..
 
இரந்து இரந்து 
கொடுக்கத் திராணியின்றி 
வாங்கத் துணிந்த மானுடம்..
 
களவு செய்து 
கபடமாடி 
கற்பு பறித்து; தொலைத்து;
கயவரோடு கூடி 
காலம் போக்கும் மானுடம்..
 
எடுத்து வீசத் துணியாத 
விட்டு ஒழிக்க இயலாத 
உடலை -
பிடுங்கியும் புலம்பும் 
பிரிந்தும் பிறரை நோவும் 
சுயநல மானுடம்..
 
பகுத்துப் பாராத கேள்புத்தி -
அறுத்தெறிய முடியா ஆசைகள்
பிரித்துத் தர இயலாத மனசு 
எடுத்துக் கொடுக்க வக்கின்றியும் 
தனக்கு மட்டுமே ஓலமிடும் மானுடம்..
 
ஆறடி மிஞ்சாத மண் தின்று 
காலடி பதியாத வாழ்க்கைக்கு 
நோயிற்கும் பேயிற்கும் பயந்து 
யாருக்கும் பயனின்றி - போகும் மானுடமே..
 
காலம் மென்று மென்று விழுங்கி 
விதைத்த விதைப்பில் -
வாழ்ந்த அடையாளமின்றி மாளும் 
மானுடமே.. மானுடமே.. 
 
எல்லாம் ஒழிந்து
எல்லாம் அற்று
எஞ்சியிருக்கும் மனிதம் காக்கவேணும் 
சுயநலம் குறைத்து வாழ்"
என்று சொல்ல -
எனக்கென்ன உரிமையுண்டோ
உன்னிடத்தில் மானுடமே!
 
வித்யாசாகர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.