காதல் விருட்சம் - கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி

Photo by Zane Lee on Unsplash

  வெறும் சதை என்று
வியாக்கியானம் பேசித் திரியும் என்னுள்
எப்படி நீ
விதையானாய்?

பாறையாய் இறுகி இருந்த என்னுள்
எப்போது நீ
உன் வேர்களை நுழைத்தாய்?

உத்தரவில்லாமல்
என் கனாக்களில்
பூவாய் சிரித்து
ஏனடி நீ
உலா வருகிறாய்?

ஒற்றுக்களே சரியாகத் தெரியாத என்னுள்
கவிதைக் காய்களை
பழுக்க வைத்தது எவ்வாறு?

என்னைச் சுற்றிலும்
விருட்சமாக வளர்ந்து
சுகமான தனிமைச் சிறையில்
என்று எனை அடைத்தாய்?

  உன் நிழல் ஒன்றே
என் வாழ்க்கை என
மாறிப் போனது எந்தத் தருணத்தில்?

எல்லாம் சரிதான்
உனக்கு மட்டும் ஏனடி
மிதித்துச் செல்லும்
தரைபடர் புதராகிப் போனேன்
நான்?
 
கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.