தொட்டுவிடும் தூரத்தில் நீ
ஆனால் நமக்குள்ளே
ஒரு ஜென்மத்தின் இடைவெளிகள்.
எனக்குள்ளே என் சுகம்போல
என் வலிகளும்...
உறவின் சந்தோசத்தைக்கூட
பிரிவின் வேதனையுடன் அனுபவிக்கும்
என் பொழுதுகளில்
இன்னும்தான் வாழ்கிறேனா என்று
எனக்குள் நானே அடிக்கடி கேட்டு
மீண்டும் மீண்டும் பூத்து
மீண்டும் மீண்டும் வாடி
மாலைக்கும் ஆகாத
செடிக்கும் ஆகாத மலர்போல
எல்லாம் முடிந்துபோன ஒரு வாழ்வின்
கனவுகளில் மீண்டும் நுழைகிறேன்.
உந்தன் கைவிரல்களை
எட்டிப் பிடிக்கும் பேராசையில்
தன்னைக் கடந்து போனவனிடம்
யாசித்து ஏங்கும்
பிச்சைக் காரனைப் போல.
சீ... என்ன கேவலம்
கண்விழித்திருந்தாலும்
கனவுச் சுகத்தில்
காலங்களைத் தின்று தீர்க்கிறது
எனது காதல்

மீனாள்செல்வன்