விட்டு கொடுத்து - சுபத்ரா

Photo by Steve Johnson on Unsplash

வாழவும் முடியாது,
சாகவும் முடியாது
தினமும் ஒரு போராட்டம்...
எனக்குள்

ஒவ்வொரு நொடியும்
தற்கொலைக்காக
ஓராயிரம் வழிகள் யோசித்து
உதவாத காரணங்களுக்காய்
உதறி நிற்கும் இயலாமை.

என்ன செய்கிறேன்
என்ற நினைப்புமின்றி
எதிர்கால சிந்தனையுமின்றி
நகருமிந்த கொடுமை

கத்தியின்றி ,கலகமின்றி
எத்தனை வேதனை ?

வார்த்தையுமின்றி
சில வலிகள் மிச்சம்

என்ன செய்ய வேண்டும்?
நான் உனக்கு....

கண்ட கனவுகள்
உன் மீது கொண்ட  அன்பு
எல்லாவற்றுக்கும் அன்னியமானேன்
என்னையாவது திருப்பி தந்து விடு எனக்கு

உணவு செல்லவில்லை
உடலை வருத்துகிற தண்டனை
கண்களில் கதறும் கண்ணீர் சாட்சி 

என்ன செய்ய வேண்டும்?
நான் உனக்கு
என்பது வரையிலாவது  பேசு
எதுவும்
கட்டாயமில்லை இங்கே

பொருந்தாத என்  காதல்
வீணான கேள்விகள்
வெளியில் தெரியா காயங்கள்
வாழ்வதற்கான நம்பிக்கை கூட
மிச்சமில்லை என்னிடம்

உனக்கு என்ன வேண்டும்
உண்மையாய் கேட்டு விடு
நீ விரும்பியது
எதையாவது கடைசியாய் கொடுத்து விட
ஆசை இருக்கிறது இன்னும்..

வெற்றியுமில்லை,
தோல்வியுமில்லை

உன்
வழியில் நீ போக
விட்டு கொடுத்து,
கெட்டதாய் இருக்கட்டும்
என் பிரியம்
சுபத்ரா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.