ஒரு விதையின் பிரார்த்தனை - டி.வி. சுவாமிநாதன்

Photo by Pawel Czerwinski on Unsplash

இலைகள் செறிந்து கிளை விரித்தால்
இணைந்து புள்ளினம் கூடமைக்கும்;
மலர்கள் பூண்டு நான்சிரித்தால்
மங்கையர் கொய்து சூடிடுவர்;

பழங்கள் குலுங்கிப் பூரித்தால்
பாய்ந்து மந்திகள் சூறையிடும்;
நிழல்வெளி பரப்பும் மோனத்தை
நித்தம் மனிதர் குலைத்திடுவார்.

வேரின் வழியே நீரருந்தி
வேர்வை சிந்தி நான்வளர்தல்
பாரில் பலர்க்கும் உழைத்தயர்ந்து
பட்டுலர்ந்த பின்ஒரு நாள்

கோடாரி கொண்டவன் வெட்டியதும்
கும்பி டென்றே அடிபணிந்து
வீடுசேர்ந்து அவன் உணவை
விறகாய் எரித்து சமைத்தற்கோ?

விதையைக் கருக்கி விட்டிடடீ!
வீணில் வளர்ந்து சாகாமல்
புதையுண் டிருளில் துயின்றிடுவேன்;
பூமகளே! அருள் புரிந்திடடீ
டி.வி. சுவாமிநாதன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.