ஒரு கிராமியப் பெண்ணின் ஓலம் - ரவி அன்பில்

Photo by engin akyurt on Unsplash

உள்ளே வயிரத்த ஒளிச்சு வெச்சு!
வெளியே கரித்துண்டா வாள வெச்சு!
புள்ளே நீ பொளச்சுப் போடினு சொன்னா!
புரியலையே உம் பேச்சு, மாரியாத்தா!!
பொத்தக் குடிசையிலே குடியேற வெச்சு!
பொம்பளைக கூசாம என்னை ஏச வெச்சு!
ஒத்தச் சேலையிலே ஒளப்பாட வெச்சே!
ஒனக்கே அது நியாயமா, மாரியாத்தா?!
அப்பனும் இல்ல ஆத்தாளும் இல்ல!
அடிச்சுப் போட்டா கேப்பாரும் இல்ல!
குப்பையக் கெளறி குறுணையப் பொறுக்க!
கோளியாநான் நீ சொல்லு, மாரியாத்தா!!
ஒத்தரும் இங்க ஒதவாமப் போக!
ஒருவாரமா எனக்கு சித்தாளு வேலே!
கொத்தனாரு ராயப்பன் கூசாம வந்து!
கட்டிலுக்கு வாடீன்னான், மாரியாத்தா!!
பொச்சப் பொத்திட்டுப் போவேனு சொன்னேன்!
பொசுக்குனு என்கையை ஒருபிடி பிடிச்சான்!
மிச்சத்த நெனச்சாலே கண்ணீரு முண்டுது!
மகமாயி, பெரியதாயி, எம் மாரியாத்தா!!
ஒத்தக் கை எம்மேலே ஒரசிட்ட தாலே!
ரத்தக் கை நான் வெச்சேன், மாரியாத்தா!
குத்திக் குதறிக் கூறேடுததுப் போட்டேன்!
எங்கப்பன் அருவாளு, மாரியாத்தா!!
சவத்தப் பொதச்சிட்டேன், மாரியாத்தா - ரத்த!
சேலையயும் அலசிப்புட்டேன், மாரியாத்தா!
வெவரங் கெட்டுப் போனாலும், மாரியாத்தா - நான்!
வெக்கங் கெட்டுப் போவலையே, மாரியாத்தா!!
தள்ளி ஒரு கெணறு உண்டு, மாரியாத்தா - நான்!
தூக்குப் போடக் கயிறு உண்டு, மாரியாத்தா!
கொள்ளி வெக்க நாதி இல்ல, மாரியாத்தா - என்னைக்!
கொன்னாத் தான் லாபம் என்ன, மாரியாத்தா?!
கூறுகெட்ட கொத்தனாரு, மாரியாத்தா - என்னைக்!
கொலைகாரி ஆக்கிப் புட்டான், மாரியாத்தா!
ஊரு விட்டு ஊரு போறேன், மாரியாத்தா - என்னை!
உருப்படியா பாத்துக்க, மாரியாத்தா!!
வயிரத்த உள்ள வெச்சே, மாரியாத்தா - ஒரு!
கரித்துண்டா வாள வெச்சே, மாரியாத்தா!
வயிறெரிஞ்ச வெக்கையிலே, மாரியாத்தா - அந்தக்!
கரித்துண்டும் வயிரமாச்சு, மாரியாத்தா
ரவி அன்பில்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.