சுதந்தரம் இல்லாமல் இருப்பேனோ?--வெறும்
சோற்றுக் குயிர்சுமந்தே இறப்பேனோ?
விடுதலை யடையாமல் விடுவேனோ?--என்னை
விற்றுடல் வளர்ப்பதில் கெடுவேனோ?
மானத்தைப் பெரிதென்று மதிப்பேனோ?--அன்றி
மாற்றவர்க் குழைத்துடல் நசிப்பேனோ?
தொழுதுடல் சுகிப்பதைத் தொலைப்பேனோ?--இன்றித்
தொழும்பனென் றேபெயர் நிலைப்பேனோ?
பயமின்றித் தருமத்திற் குழைப்பேனோ?--விட்டுப்
பாவங்க ளுக்கொதுங்கிப் பிழைப்பேனோ?
ஞான சுதந்தரத்தை அடைவேனோ?--இந்த
ஊனுக்கு ழைத்தடிமை தொடர்வேனோ?

நாமக்கல் வெ இராமலிங்கம் பிள்ளை