மூன்றாம் பரிமாணம் - சத்யானந்தன்

Photo by Jr Korpa on Unsplash

மனித இயங்குதலில்
முதுகெலும்பு
விரைவுகளில்
வாகனங்கள் இவை
மையமாய்க் கொள்ளும்
சங்கிலி
 
மூன்று ராட்சதக்
கண்ணிகளில்
காலத் தொடர்ச்சி
நினைவு அடுக்குகளில்
மூன்றாம் பிறையாய்
சில
 
பசுமை விரியும் காடுகள்
மண்ணுள் விரையும் வேர்கள்
எதன் கண்ணிகளும் ஆகா
அவை
உயிர்ப்பின் சுதந்திர வடிவங்கள்
 
பிணைத்து நெருக்கி
வழி நடத்தும்
உறவு பணியிடச் சங்கிலிகள்
அதிர்ச்சிப் புதிராய்
அவ்வப்போது விலக
மின்னி மறையும்
விரியும் நீள் பெருவழி
 
பாதுகாப்பு
தளை
சங்கிலியில்
கட்புலனாகும் இரு
பரிணாமங்கள்
 
வெவ்வேறு இரவுகளை
வெட்டித் துண்டுகளைக்
கண்ணிகளாய்
வார்த்துப்
பிணைக்கும் மாயை என்னும்
மூன்றாம் பரிணாமம்
 
சத்யானந்தன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.