பூப்பூக்கும் காதல்
மன்னார் அமுதன்
நினைவுகளைத்
துரத்திச் செல்லும் இரவுகள்
இலக்கின்றிப் பயணிக்கும்
உன்
பிஞ்சு மனதிலே
தஞ்சம் கேட்டு
நித்தம் சண்டை பிடிக்கும்
பசியில்லாப் பகல்களும்
பட்டிணி இரவுகளும்
பழகிப் போகும்
பல்லியிடம் வீசியெறிந்த
உன் முதல் பல்
என் காதல் கருவூலத்தை
அலங்கரிக்கும்
உனக்குள் கட்டமைத்த
வாழ்க்கைச் சுனையில்
என் வேர்கள் நீர்தேடும்
இருந்தும்..
தவறுகளின் பட்டியலால்
மலடான நம் காதல்
உன்னொரு
புன்னகையால் மட்டுமே
மீண்டும் பூப்பூக்கும்