தொட்டில் சேலையை விலக்கி
கன்னத்தில் ஒருவிரல் வைத்துறங்கும்
மகளை பார்த்து கொண்டிருந்தேன்
தூங்கிற பிள்ளையை பார்க்காதே
என்றாள் அம்மா
திடீரென தூக்கத்தில் சிரித்தாள்
கடவுள் வந்து சிரிக்க வைக்கிறார்
என்றாள் அம்மா
திடுக்கென்று அழுது தூங்கினாள்
காத்து கருப்பு பயம் காட்டுகிதென
தொட்டிலின் கீழ் இரும்புதுண்டை
வைத்தாள் அம்மா
மீண்டும் என் மகள் அழ
அடுக்களையிலிருந்து ஓடிவந்து
கச்சை பால் கொடுத்தாள்
என் மகளின் அம்மா

வி பிட்சுமணி